Pages

Sunday, October 1, 2023

மூக்கன் சரிதம்

<செம்மையுறாத பிரதியிலிருந்து>




திரிசிரபுரம் - பால்வீதியின் நுண்மைக் கண்களால் அளந்து வைக்கப்படாத அதன் வரகனேரிபாளையம் தூமைக் குடிசைப்புறமென்று அழைக்கப்பட்ட வாழ்நிலத்தின் மண்பரப்பில் அமர்ந்து கற்கள் எறியும் குரங்கின் மீது தடிகொண்டு தாக்கியவர்களின் வீச்சில் இரத்தம் சீறிப் பாய்ந்த அகோர கதை - இதுகாறும் வெறும் கதையொன்றை, அவள் தன் கைகளோடு மார்பகங்களையும் எடுத்து மேசையில் வைத்துவிட்டதினை அவதானித்தவர்களை கண்ணுற்றபொழுது எதிர்புற வண்ணச் சுவரில் வங்கியின் வட்டிசார் விளம்பரத்தில் மரத்தின் கிளைகளில் தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கும் வால் விலங்குகளில் ஒன்றின் மீது சிகப்பு வர்ணத்தில் ஆடை போர்த்தியபடி வரையப்பட்டிருந்த கதையென்ற அனுபவத்திலிருந்து அவனை தூக்கி எறிந்த ஒரு ஓவியத்தை யதேச்சையாகப் பார்த்தவனின் நினைவென்னும் மென்னுடலின் மேல் கத்தி வைத்து இழுத்த உணர்வெழுந்தது.

மேலும் கீழும், கிடைமட்டமாகவும், சகல இடங்களிலும் அரை மணிநேரமாக அந்த விளம்பரத்தைப் பார்த்தவன் ஓவியத்தின் வலது/இடது ஓரங்களில் கிறுக்கலான கையெழுத்து அல்லது அப்படி வேறு ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். காண்பதற்கரிய தொல்சிற்பமொன்றைக் கண்டதைப்போல இருந்தது அவனுக்கு. நான்கைந்து குரங்குகளில் சிகப்புநிற துவாலையால் போர்த்தப்பட்டதைப் பார்க்கும் நிமிட கால வரையறையில் மனதில் இருந்த பதற்றம் நீர்க்குடுவையில் செலுத்தப்பட்ட இராசயனத்தைப்போல உடலெங்கும் ஊர்ந்து பரவுவதை கைகளில் ஏற்பட்ட பெரும் நடுக்கம் அவனுக்கு உணர்த்தியது. 

பல கோணங்களில் ஒரு முப்பது நாற்பது முறை தன் ஆடம்பர அலைபேசியில் ஒளிப்பழத்தை விடுவித்தும், இயக்கியும் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளினான். புகைப்படமெடுக்கும் சமயம் கைகளும், அவனுமாய் சாமியாட்டம் ஆடியதைக் கண்டவர்கள் என்றுமில்லாத அவனுடைய ஒவ்வொரு செய்கையையும் மந்திரத்தால் சாகசங்கள் செய்பவனைப் பார்க்கும் பார்வையாளர்களைப் போல விநோதமாகவும், இயல்பின்மையின் கோடியில் தாங்களும் ஒருவராய் சேர்ந்துவிட்ட கதையால் அதிசயப்பட்டுப் போனவர்களுமானார்கள்.

இவ்வுலக உணர்விற்கு வர அவகாசம் பிடித்த அவன் உள்ளுணர்வை குறை கூறினான். விரைவாக அந்த இடத்திலிருந்து கிளம்பி வார விடுப்பு பெற்று அவன் வழக்கமாகப் பயணம் செய்யும் குளிரூட்டப்பட்ட பேருந்துக்காக காத்திராமல் அரசுப் பேருந்தொன்றில் ஊருக்குப் புறப்பட்டான். அலுவலகத்திலிருந்து நேராக விடுதிக்குச் செல்லவில்லை. விடுதியில் உடன் தங்கியிருக்கும் நண்பர்களிடம் கூட சரி, ஊரிலிருக்கும் அம்மையப்பனிடமும் தான் வருவதாய் எந்தவொரு தகவலும் சொல்லவில்லை. அவசரமிகுதியில் என்ன செய்வதென்று அறியாதவனைப் போல, யாரோ நெருங்கிய உறவினரொருவர் தவறிவிட்டதைப் போல இருந்தது அவன் அலுவலகத்திலிருந்து அன்று கிளம்பிச் சென்றது. 

திரிசிரபுரம் - திருச்சினாபோலியாகி பின் திருச்சிராப்பள்ளியென்ற பெயர்பெற்று - இன்று திருச்சியாகச் சுருங்கிய கதை வரை ஒருவேளை இதுவும் அதுபோல முடியாத கதையாக நீளும் ஒரு மர்மத்தைக் கண்டறிந்த தருணமே பேருந்துப்பயணம் முழுவதும் அவனை ஆக்கிரமித்து ஊரடைய வழி செய்தது. பேருந்திலிருந்து இறங்கியதும் வீடடையவில்லை. யாரை அவன் சந்திக்க வேண்டி கிளம்பினானோ அவன் முகம் மாலை வெயிலின் நித்திய ஒளியில் வெளிக்கிளம்பும் நிறைமதியினைப் போல் வழியில் பட்டது.

ரகசியம் தாங்கிய கண்களில் சிரித்தான்,  வருகைப் பதிவெட்டுக்காக இருப்பை அறிவிப்பதைப் போல வலது கை உயர்ந்தது ஐயப்பனை நோக்கி.

நீண்ட நாட்களுக்குப் பிறகான பாரம்பரிய விசாரிப்புகள் ஏதுமில்லாமல் நெருங்கி சாதாரணமான குரலில்,

"நான் மூக்கனைப் பார்த்தேன்" என்றான்.

வியப்பின் நிழல் பட்ட கணம் ஐயப்பனின் மனமெங்கும் சூடேறின. திகைப்பென்பதும் கூட பேயைக் கண்ட பயமாகி அவனைச் சூழ்ந்தது. அந்த பயம் அவன் முகத்திலும் படர்ந்தது. அப்பொழுது அவர்களிருவரும் ஆசுவாசமடைய குறைந்தபட்சம் ஒரு தேநீர் அத்தியாவசியமாகிப்போனது.

***

காலஞ்சென்ற கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் வரகனேரி பகுதியில் தங்கி எடுபுடி வேலை மட்டுமே செய்யக்கூடிய மூக்கனை சந்தித்தும், அவனிடமிருந்து பெற்ற சில தகவல்களின் அடிப்படையிலும் பழமையுள்ள கொத்தாலத்தான் கோவிலின் தம்படி உருப்படியில்லாத காப்பு கட்டும் உரிமையை அவனுக்கு இந்த முறை பெற்றுத் தருவதாகவும் நம்பிக்கையளித்திருந்தார்.

அதன்படி தன் சகல பரிவாரங்களுடன் அவரை சந்திக்க பெரிய சௌராஷ்ட்ர தெருவின் எல்லைக்கு வந்த சேதி கேட்டு மளிகைக் கடை இரத்தின பிள்ளை, ஐயாவின் தயவின்றி என்னால் யாரையும் அனுமதிக்க இயலாதென்றும், மீறி தெருபுகுந்தால் அத்தனை உயிர்களுக்கும் அவர்களே சாட்சியென்றும் சொல்ல மூக்கன் மௌனமாக அனைவரையும் திரும்ப அழைத்தான்.

பணிந்து செல்ல மூக்கன் சாதுவானவனல்ல. கடும் முரடன். வரகனேரி சண்டியன். கண்ணன், சந்திரனாகிய இரட்டையர்களுக்கு பாரிய காலமாய் சிறந்த அடியாளாக இருந்தவன். முன்யோசனையின்றி கை அகட்டுபவன். தேர்ந்த குடியன். உள்ளூர் கிழத்திகள்கூட சாதி வேறுபாடு கடைபிடிப்பதால், நாட்டியமாடும் விராலிமலை பார்ப்பன யுவதிகள் உடல்களுக்குள் ஆழப்பாய்ந்தவன்.

மதுர வெட்டவெளியின் அகன்ற பரப்பில் ஓரமாய் அமர்ந்து சூதாடும் குழுவினரின் புறக்கணிப்பை அர்த்தமுள்ள வசைகளால் கடக்கும் மூக்கன் வரகனேரியின் உயர்குலத்தோர் மட்டுமல்லாது யாவரிடத்திலும் மதிப்பு பெறவில்லை.

மூக்கனிடத்தில் கி.ஆ.பெ.வின் வருகையே பணிந்து செல்ல வைத்தது என்று சொல்லலாம். பகுக்கப்பட்ட சமூகத்தில் அவனை அங்கீகரித்த ஒரே மனிதர் அவர்.

எந்த பகுதியிலிருந்து, எப்பொழுது இங்கு வந்து குடியானவர்கள் என்று மூக்கன் சாதியினரை கண்டறிவது கடினம். பாளையத்துமார் தன் சொந்த சேவைக்காக இருப்பதில் கடைநிலையான அடிமையாகக் கூட விலைபோகாத சிலரை சுத்தமான பகுதியிலிருந்து ஒதுங்கிய வரகனேரிக்கு அழைத்து வந்து குடியும், கூழும் கொடுத்ததாக சொல்கிறார்கள். சௌராஷ்டிரர்கள் முதல் வந்தேறிய லம்பாடிகள் வரை தீர்க்கமான வரலாறுண்டு, மூக்கன் குழுவிற்கு தெளிவாக வரலாற்று புலத்தில் நிச்சயமான தகவல்கள் யாதுமில்லை. அங்கொன்றுமிங்கொன்றுமாய் பிட்டு வைத்த கதைகளே அவர்களது பரம்பரை வரலாறாக பேசப்படுகின்றது.

ஒல்லியான, கூர்மிக்க சிறிய மீனின் முள்ளைப் போன்றதொரு பசைஊசியை மூக்கில் அணிந்திருக்கிறார்கள் என்பதால் மூக்கர்கள் என்றும், ஆண்கள் என்றால் மூக்கா, பெண்கள் மூக்கி போன்ற ஒட்டுப் பெயரைத் தாங்கியும் இருப்பதிலிருந்து பழங்குடி இனத்தின் சாயல்கள் மூக்கர்களிடத்தில் ஒளிந்திருப்பதாக இவர்களை ஆராய்ந்த சில மானிடவியல் அறிஞர்கள் எழுதி வைத்திருக்கின்றனர்.

சமூகத்தில் யாதொரு படிநிலையிலும் இல்லாத ஒரு அரூப சமூகம் திருச்சி வரகனேரியில் எந்த பணியிட்டாலும் செய்து எத்தனை குறைவான கூலிக்கும் தலையாட்டி வீச்சமடித்து குப்பையிலெறிவதையும் முந்தானையில் வாங்கி ஆதி விலங்கினங்களைப் போல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இவர்களிடத்திலிருந்து திமிறி தினவடையும் சரண்கொள்ளாத பச்சைப்பூஞ்சானாய் ஏறி நகரும் குணம் பெற்ற ஒருவன் மூக்கன். அவனை விட ஒரு பிரம்மாண்டத்தின் அதிரகசிய பிறவியான சில நேரங்களில் ஆத்திரமாகவும், பல நேரங்களில் அரவணைத்தும் அவன் பழகி வளர்த்த குரங்கு. ஊரிலுள்ளோர் மற்ற பிறரும் அதே சாதிக்காரரும் மூக்கன் குரங்கென்றே அழைத்து வந்தனர்.

கி.ஆ.பெ. தலையிட்ட நியாயமாதலால் புனித உயர்குலத்தார் எதுவும் சொல்லவோ மாற்றவோ இயலாமல் போனாலும் மூக்கன் சாதியின் பாரம்பரியத்தை மிக இழிவான கதைகள் மூலம் கட்டமைத்தனர். அதன் பேரால் ஓரிரு சுகவிரும்பிகள்கூட எதிர்நிலையில் பயணப்பட வேண்டியிருந்தது. இவையாவும் மூக்கன் வளர்த்த குரங்கிற்கு புரியாத ஒன்றில்லை என்பதே இங்கு அதிசயமும், புதுமையும்.

மூக்கனுக்கு போத்தல் சாராயம் முதல் சிப்பி பீடிக்கட்டு வரை வாங்கி வந்து தருவது மூக்கன் குரங்கின் காரியம். காய்ச்சலுக்கு வெந்நீர் கூட வைத்து தரும் குரங்கு மூக்கனைப் போலவே இச்சமூகத்தினாலும் இட்ட பணிகளை செய்து வந்தது. மூக்கனோடே வாழ்வதால் குரங்கையும் அவன் மூக்கா என்றே அழைத்தான்.

அவன் அதட்டக்கூடிய கோபம் வந்தால் விளாசக்கூடிய ஒரே ஜீவன் அந்த குரங்கு மட்டுமே. ஒருமுறை மூக்கன் குரங்கு கொண்டு வந்த கறியில் உப்பில்லை என்ற வெறியில் கடும் போதையுடன் குரங்கை அடித்து மிதித்தான். உடல் வலிக்க குரங்கு துடித்தது, தவழ்ந்து சென்று மீதமுள்ள சாராயத்தை உறிஞ்சி தள்ளாட்டம் போட்டு வெளியில் ஓடிப்போனது.

ஒருவகையில் குரங்கு போதையை அனுபவிக்க கற்றுக்கொண்டதுகூட மூக்கனின் பொறுமையின்மையால் இருக்கலாம். ஆனால் அதையே சில நாட்களில் பழக்கப்படுத்திக் கொண்டு சரிசமமாக வாழத் தொடங்கியது.

மூக்கனைப் பொறுத்தவரை மனிதனைப் போன்றது அக்குரங்கு. அவனும் குரங்கும் இரட்டைச் சகோதரர்கள் என்பதே மக்களின் கருத்து.

நிலவின் தேய்ந்த ஒளியில் துரைசாமியின் மருமகளுக்கு வயிற்றில் வலி பீடித்ததும் மூக்கன் குரங்கின் தயவால் மருத்துவச்சி விஜயம் செய்தாள். அவள் வாய் திறக்கவில்லை. அடிமட்ட சாதியின் ஏவல்களை கவனிக்கும் மனிதப்பிறவியில்லாத ஒரு குரங்கின் மேன்மையை சொல்வதென்பது அவளைப் பொறுத்தவரை கௌரவமற்ற செயல். ஊரின் பல நல்ல/கெட்ட காரியங்களுக்குப் பின்னிருக்கும் மூக்கன் குரங்கு தீட்டுப்பட்ட சீவனை விட கீழ்நிலையில் வைத்து பார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. தவிர்த்து ஊரார் பழக மறுக்கும் மூக்கனிடமும் அவன் சமூகத்தாரிடமும் அன்பாக நெருங்கி இருந்தவர்களுள் பாஸ்கர பண்டிதரும் ஒருவர். சௌராஷ்ட்ர தெரு குடும்பங்களுக்கு சடங்கு சம்பிரதாயங்களை கவனிக்கும் ஒரே நல்ல மனிதர் பாரம்பரியமாய் புழங்கிவரும் உறவுமுறைகளின் மேல் நம்பிக்கையிழந்து மூக்கன் சமூகத்தவரை முதன்முதலாய் தெருவிசயம் செய்ய வைத்தார். முகத்துக்கு முகம் பேசாத சொற்களை பின்புறமாக துப்பினார்கள் அவருடைய பூர்வ விசுவாசிகள்.

மூக்கன் வகுப்பினரின் சடங்குகளையும் முன்னின்று நடத்தியவர் அக்காலத்தில் திருச்சிராப்பள்ளியின் பல்வேறு இனத்தவர்களிடையே காழ்ப்பையும், பாராட்டையும் ஒருங்கே பெற்றார். கிறித்துவ மிஷனரியைப் போல மூக்கன் சமூகத்தவரும் அனைத்து வழிகளிலும் சம பாகம் கொடுத்தார். கி.ஆ.பெ. அவருக்கு பக்கபலம்.

இத்தோடு நில்லாமல் மூக்கன் சமூகம் மட்டுமின்றி யாருமே எதிர்பார்க்காத மலைக்கோட்டை சன்னதியின் நுழைவு வாசலில் அவர்களுக்கு சிறப்பு வழிபாடு மட்டுமின்றி சாஸ்திரிகளின் மூலம் அர்ச்சனை ஏற்பாடுகளுக்கும் தயார்படுத்தியது அனைவரையும் உலுக்கியது. கும்பலாக திரள ஆரம்பித்தார்கள். தீவெட்டியுடன் நாலாம் திசையிலும் சங்கங்கள் கூடின. பாஸ்கர பண்டிதரை கடுமையாகப் பழிவாங்கவும், மூக்கன் சமூகத்தவருக்கு தண்டனையாக வரிப்பொருட்களை விதிப்பதையும் குறித்து யோசித்தனர்.

பாஸ்கர பண்டிதர் எதற்கும் அசையவில்லை. அவரை அவர்களுடைய வாழ்நாட்களின் இறுதிவரை நினைத்த எதையும் சாத்தியப்படுத்த முடியாமல் போனது.

இவருடைய நெருங்கிய நட்பாக மூக்கனும் அவனுடைய செல்ல மிருகமும் சுற்றி சுற்றி வந்தனர். மூக்கன் மட்டுமின்றி அவன் சாதிக்காரர்கள் அனைவரும் ஓரளவுக்கு திசை மாறி மனித ஏற்றம் பெற்றதில் பாஸ்கர பண்டிதருக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் பெரியவருக்கு அளப்பரிய பங்கு உண்டு.

Sunday, August 6, 2023

நீலகேசியின் மறு உரையாடல்/சொற்களற்ற நூல்கள்....


அகசூனியத்தில்
ஸ்தூல வெளியின் கருமைப்பரப்பில்  மிதக்கும் நீலகேசி வனதியின் அரூப
பிம்பங்கள் சகிதமாக
ஓர் உன்மத்த சாயை - தாண்டவராயன்

இதுகாறும் காணக் கிடைக்கும் பத்திகள் சாராம்சமிக்க பிராரம்ப உசாவல்களாகவும், பாரம்பரிய சடங்கு வழியில் செய்யப்பட்ட கடன் தீர்க்கும் முறையிலும் தேங்கி நிற்கின்றன.  கேட்ட குரலையே மீளச் சொல்லும் பாங்கிலிருந்து விலகி மாற்று ஏற்பாடு செய்ய ஆசிரியரே முன் வருவது எத்தனை அபத்தம். ஒரு மொழியில் முயற்சிக்கப்பட்ட பிரதி தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்வது அசாத்தியமான காரியம் என்ற சிந்தனையே அவலமானது, மேலும் ஒட்டுமொத்த கதாவாசக கும்பல்களிலிருந்து ஒரு விந்து முதற்பிரதியின் பாற்பட்ட ஸ்நேகத்தாலும் (ஒருவேளை பரிதாபத்தாலும் கூட) அதை அண்டி அன்போடு அணுகுவதென்பது போற்றத்தக்கதல்ல.

இப்போற்றத்தக்க நிலையிலிருந்துகொண்டுதான் ஒரு பிரதியை ஏற்றுக்கொள்வதை நீலகேசியும் முயல்கிறாள். நீலகேசி சிங்கள இனவாதம் தோன்றவியலாமலிருக்க எந்த சிரத்தையும் மேற்கொள்ளாத பௌத்தத்தை அன்றே மறுத்துவிட்டு சமணத்தை அங்கீகரித்தவள். அவள் வழிவந்த இவளும் சாமானிய வாசகி. அவள் அர்த்தங்களுக்கொப்ப சில வாசிப்புச் சாத்தியங்களை இப்புதிய பிரதிக்கு அளிக்க விரும்பினாள்.

நீலகேசியின் உசாவற்படி ஆயிரமாம் ஆயிரம் வருடங்களாய் அழிவின்றி இடைவிடாது ஓரிடத்திலிருந்து கிளம்பி அலைந்து பிரிவுற்று இறுதியில் கடல்புகும் நதியின் பரந்த அசைவைப் போன்ற இவ்வுலகக் கதைப்பரப்பில் எங்கோ நடுவில் ஓரிடத்திலிந்து இழுத்து எடுக்கப்பட்ட கதைத்தொகுப்புகள் சர்க்கங்களாய் விரிந்ததாகவும், பிரம்மாண்டப் பெருவெளியின் மூலையொன்றிலிருந்து பிரித்து உருவப்பட்ட சொற்களின் தொடர் சேர்க்கை இப்பிரதியின் பகுதிகளாய் மாறிப்போனதாகவும் சொல்லப்பட்ட இப்புதிய பிரதி ஓர் அர்த்தமற்ற பித்தத்தனத்தில் தனக்கேதனக்காய் பேசியவளின் செய்கைகளைக் கண்ணுற்றவர்கள் அவள் இடையின்றி மேலும் பேசுவதற்காக காத்திருந்தனர்.

அவசியமேயில்லாமல் பல இடங்களில் ஆசிரியப்பிரசன்னம் நிகழ்வதாக அவன் குறைபட்டுக்கொள்ள நீலகேசியோ அவன் ஊடுருவலின் முக்கியத்துவம் குறித்துப் பேசலானாள். 

புரட்சி என்ற சொல்லையே நீக்கியவள் எலினார் என்பதை வரலாற்றின் கடைசி வாசகனுக்குக் கடத்திவிட நினைப்பதும், தத்ரூபத்தின் முதிர்ச்சியின்மையைப் புரிய வைப்பதும் சாத்தியமாகாத ஒன்று. அதற்கு இப்பிரதியையும் தொழிலாக வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர ஊடறுத்தல் ஒருவித குறைபாடு என்ற மனோநிலை குறிப்பிட்ட இடத்தில் பொருந்தி வராது.

ஆமோதிப்போரின் நடுவில் உருவான வெற்றிடம் தன் காய்ந்து போகாத ஒற்றைப் பரிமாணமிழந்த சுயகேள்வியின் வெளிப்பாடாகும் என்பது நீலகேசியின் நம்பிக்கை. அவள் சலசலப்பான பேச்சுத்தொகைகளுக்கு சோரம் போகாத திண்ண உரையாடல்களை செறிவாக்குவதில் பயிற்சி செய்பவள். ஒரு சகவிந்து பார்ப்பனீய அம்சங்களின் முதன்மையை பூடகப்படுத்துவதை எதிர்கதையாடல் என்ற புரிதலின் சாரத்தை படர்த்துவதன் மூலம் ஆசிரியனற்ற பிரதி செயல்படும் சாரத்தை விளக்கினாள்.

ஒரு கண்ணாடியைப் போல
எதிர் எதிராக
இருவேறுபட்ட
எதிர்வுகளின்
நித்தியம் 
தாண்டவராயன், ஓர் எதிர் கதையாடல்


துயிலார் X நித்திரவார்:

துயிலார் இனத்தின் வேர் குடுகுடுப்பை சமூகம். ஒன்பது கம்பளத்தார்களில் "நித்திரவார்" குழு மட்டுமே குடுகுடுப்பைத் தொழிலில் ஈடுபடும்.

தொல்கதைகளின்படி "நித்திரவார்" என்பது உறக்கத்தினால் ஏற்பட்ட ஒரு பெயர்.  புலாலில் வலு பிரசித்தம் பெற்ற மாட்டிறைச்சியை மறுக்கிறார்கள் இவர்கள்.  தாழ்த்தப்பட்ட குழுக்களோடு பிற சமூகக்குழுக்களின் உறவெப்படியோ அதிலொரு எள்ளும் வேற்றுமையற்ற உறவு. சுருக்கமாக போலச்செய்தலின் உதாரண குழுக்களில் ஒன்றே நித்திரவாரும்.

பிரதியின் சூட்சுமம் இக்குறிப்பிட்ட தளத்தில் வெளிப்பட்டுவிடும் என்ற அர்த்தத்தில் நீலகேசி மேலும் எழுதியதாவது:

துயிலார் திரும்பச்செய்தல், போலச்செய்தலுக்குள் வரையறுக்கப்படாது தனித்திருக்கும் இனம். அவர்களின் முதற்பணியே தாழ்ந்த குழுவின் குலவீரன் பாடலை உச்சரிப்பது. உறங்கா சாபமேற்ற இரவுகளில் வாழும் அற்ப  ஸ்திதி பெற்ற உயிரிகள்.

துயிலாரும் நித்திரவாரும் விலகும் எண்ணற்ற இடங்கள் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இணையும் இடங்கள்.

ஆந்திர நிலத்தை சேர்ந்த நித்திரவாரும், கர்நாடக எல்லையில் வசிக்கும் துயிலாரும் - குடுகுடுப்பை சமூகத்தை வேராகப் பெற்றிருக்கும் நித்திரவாரும், துயிலாரும் இணையும் புள்ளிகள் தர்க்க சாத்தியங்கள் உருப்பெறக்கூடிய தருணத்தில் பிரதியில் பொருந்தி வருகிறார்கள்.

சாரமான இந்த உரையாடல் புரிதலுக்காக உள்ளதோ அன்றி இதற்குள் சக விந்து சனங்களின் சொற்கள் நுழைய ஒரு இறுக்கமான வறட்டுச் சுவரை எழுப்பி வைக்கவில்லை - நீலகேசி. [சொற்களற்ற நூல் - பக் (73)]

பனுவல்களில் ஸ்தூல இருப்பும் ஏற்றமளித்தல் என்ற கோட்பாடும்:

ஆரம்பம் முதலே பனுவல்களில் 'இருப்பை' மறுத்து வந்திருக்கின்றனர். நடைமுறை உலகில் சமூகங்களுக்கிடையே கட்டமைக்கப்பட்ட உறவுமுறை பிரதிகளில் அச்சாகும் முறைமை தடுக்கப்பட்டு ஓரியல்பு மேலாண்மை நடைமுறையில் இருந்துள்ளது. கதைப்பாடல்கள் என்ற வகைமை மிகப் பிற்காலத்தில் சிறிய குழுவினரால் நிறுவனமயப்படாத எந்தவொரு ஆதரவுமற்ற சுவடிகளாக பாதுகாக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய சாத்தியங்களே அதிகம்.

நீலகேசியின் வசன அர்த்தங்களின்படி நாரதர் ருக்மணி தாயாரிடம் கதைத்து சுகர் பரீக்ச்சித்து ராஜனிடம் அறிவித்த சூத பௌராணிகர்களின் வழியே பிரம்மாண்ட தொகுப்பாய் விரியும் பாகவதமும், துயிலார்களின் கதையுலகமும் ஒரே நேர்கோட்டில் இருவேறு நிலைகளை சொல்லியிருப்பதனால் மேலுமொரு அகச்சான்றாக இதை பிராம்மணீய சாயல்களின் இருப்பின்மையை வலியுறுத்தி பிரதியின் புரிதலில் மாற்றத்தைக் கோரி நிற்கின்றது.

தாழிடுதலில் எந்தவொரு அசைவியக்கமும் நிகழாதபட்சத்தில் ஏன் காதுகளால் மட்டுமே கேட்டதை பிதிர் சஞ்சார மார்க்க போதினியில் இணைக்க வேண்டும்? அதை திப்புவின் நூலகத்திலிருந்து எடுப்பதற்கு உதவும் தேவை எங்கிருந்து வந்தது?

'எச்சில்' - என்றொரு சொல் உண்டு. மிகப்பிரமாதமான சொல். பிரதியாசிரியர் பிரதியை பற்பல மிக மென்மையான இழைகளால் இணைத்திருக்கும் அற்புதத்திற்கு சான்று  இது.

மாற்றுக்கருத்தின்றி இக்குறிப்பிட்ட இடத்தில் ஒன்றற கலக்கும் உவமையை நீலகேசி நினைவுறுத்துகின்றாள். சப்த ப்ரம்மம் நிசப்த ப்ரம்மத்தை பிரகாசிப்பிக்கிறது. என்னே ஒரு பொருத்தம். ஆஹா! பிரதியின் ஆசிரியன் சாமானியனல்லவா!

மீண்டுமொருமுறை,

சப்த ப்ரம்மம்
'நிசப்த'
ப்ரம்மத்தை
பிரகாசிப்பிக்கிறது...

நிசப்த ப்ரம்மம் செல்லியைப் போல, கோணய்யனைப் போல, ட்ரிஸ்டராமைப் போல, தாண்டவராயனைப் போல. வேறேதும் சொல்லாமல் வாசகரின் கவனத்துக்கே விட்டுவிடுகிறாள் நீலகேசி என்ற நீலகேசி வனதி.

மற்றொரு சக விந்தின் உரைகளின்படி நீலகேசியின் வசனங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன.

பாகவத கதைசொல்லிகளின் நிலையை துயிலாருக்கு அளித்தலும், நற்தூய தொகுப்பின் மதிப்பை (பாகவதம் போன்ற) பிதிர் சஞ்சார மார்க்க போதினியில் இணைந்த சர்க்கமொன்றிற்கு வழங்குதலும், சமூகக்குழுவொன்றின் தாழ்கள் அறுந்து 'எச்சில் பிரதியை' எழுதுதலும், அதை பாதுகாத்து கொணர வழி செய்தலும், 'எச்சில்' என்ற தூய்மையற்ற மொழிதல்கள் பிரதிபடுத்தப்படல் என்ற கருத்தாக்கத்துக்குள் நுழைதலும், சப்த ப்ரம்மத்தின் சமநிலையில் மொழிதல்கள் வைக்கப்படுதலும் என பல்வேறு ஏற்றங்கள் பிரதியில் உலாவுகின்றன போன்ற அர்த்த சாத்தியங்கள் அவ்விரிவின் மீச்சுருக்கமான விளக்கமாக இருக்கலாம்.

ஸ்தூல மறுப்பு பெற்ற சொற்கள் நிறுவனத்தின் எலும்புக்கூட்டை மட்டுமே அணிந்துகொண்டு நடைபாதையை அலங்கரிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல. புதினத்தின் அர்த்த பொருண்மைகளைவிட தனது வசன பூசண வாக்கியமொன்றில் பிரதியின்ஆசிரியர் இதனை நிகழ்த்தியிருக்கும் விதத்தையே மேலாக பாராட்டியிருக்கிறாள் நீலகேசி.

எலினாரின் கதையுலகில்; சோங்ஹாவின் பாடல்களில்;

தன் கண்களில் அதீத கருமை படர்ந்த பிறகே அவள் மெச்சத்தகுந்த பாடல்களைப் பாடினாள் என்று 'பன்சோரி' என்ற பாடல்களின் மூலம் கதை சொல்லும் கொரிய நாட்டுப்புறக் கலையை கேட்டறிந்த சமயத்தில் நீலகேசி சிறிய குறிப்பாக விட்டுச்சென்றதை சக விந்தின் துணையுடன் அறிதல்.. எலினாரின் கதை சொல்லல் முறைமையோடு ஒத்துப்போகின்றதாக நவீன விந்தின் வாசகங்கள் தெரிவிக்கின்றன.

சோங்ஹாவும் எலினாரும் ஒரே பிரதிமையின் இருவேறு பக்கங்கள். 'எலினாரின் வெண்ணந்தகம் - சோங்ஹாவின் கரும்பரப்பு' என்ற படிமம் வாழ்வின் நெடிய சாராம்சம் என்பதே நீலகேசியின் கருத்து. காமத்தை அதன் இடையூறை வலியுறுத்தி ஆகச்சிறந்த படைப்பொன்றை சாத்தியப்படுத்திவிட ஏங்கும் இரு கலைஞர்களின் நிறைவேறிய லட்சியம். ஆதலால்தான் எலினாரின் கதை பெரும்பரப்பில் பல தர்க்க சம்பாஷணைகளுடன் விளிம்பின் எளிய வாழ்வை விவரிக்கின்றது. ஆதலால்தான்  சோங்ஹாவின் பாடல்கள் பிரபஞ்ச லயத்தில் ஒன்றுகலக்கும் பிசிறற்ற பாடல்கள்;  பாமர வாழ்க்கையாய் வெளிப்படுகின்றது.

இயற்கையின், அரூப சிதைவின் துல்லியங்கள் இசைந்து வர காமம் துறந்த எலினாரும், சோங்ஹாவும் பிரதிஆசிரியரின் தூண்டுதலற்று வாசகனிடத்தில் வந்து சேருகிறார்கள்.

அனுபவம்/நிரூபணம் - உடல் - குறித்த உரையாடல்களில் முடிவுறும் தாண்டவராயன் சரித்திரம் எலினாரின் கதைகளுக்குள் உலவும் மனிதனின் தேடலின் வழியே சரித்திரத்தின்  ஆரம்பமான அபௌருஷேயமான நாட்டார் பாடலில் துவங்குகின்றது என்பதாக நீலகேசியின் கடைசி வசன பூஷண வரிகள் நமக்குச் சொல்கின்றன. ஏன் என்றுதான் கேட்பாரில்லை.

வனமோகினி - எலினார் - செல்லி -
நீலகேசியாகிய நீலகேசி வனதி-
சக விந்தணுக்கள்



ஆதியின் முகமையில்
வேருண்ட நிலம்
பதுங்குகுழியில்...

சருகு மரம் விதை
சுழற்சியில் யாவும்

அந்திம கால கருணையாய்
மனம்
ஓர் அரூப யுவதியை இம்மண்ணில்
ஜனித்து எடுக்கிறது...

(வசன பூசணம் நிறைவுப்பாடல்.)

---------------------------------------------

நா.வானமாமலை தொகுத்த கூத்துப்பாடல்களுள் காத்தவராயன் கூத்துப் பிரதி முக்கியமானது. அவர் அந்த  கூத்துப்பிரதியில் ஏற்கனவே உருவாகியிருக்கும் சில கருத்துப்பேதங்களை மறுதலிக்கிறார். வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கும் முன்னுரை ஒரு கூத்துப்பிரதியின் பிரதான செயல்பாடு எவ்வாறு அமையவேண்டும்; படைப்பின் நோக்கம் எதைக்குறித்தது போன்ற கேள்விகளுக்கு மறைமுகமான வழிமுறைகளைத் தாங்கியிருக்கும்.

சமூகக்குழுக்கள் தங்களுள் உருவான சாமானிய ஆளுமைகளின் வழிபாட்டு வடிவங்களைப் பிரதிபடுத்துகையில் கையாளவேண்டிய கவனத்தை நா.வானமாமலையின் இக்குறிப்பிட்ட கூத்துப் பாடல் தெளிவாக்குகின்றது.

இதை மையப்படுத்தி தாண்டவராயன் கூத்தினை அணுகும்போது நா.வானமாமலையின் கூத்து குறித்த சிந்தனைகளோடு ஒன்றிப்போகிறதெனலாம்.

கோணய்யன் மறைவும், உடற்பாகங்களால் ஊர்களை எரிக்கும் கதைப்பாடல் பகுதியும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கூத்துப்பாடலும் புனைவின் நிழலோடு நாட்டார் மொழியை மெருகேற்றிய விதத்தில் ஆதார கூத்துப் பாடல்களைவிட தனித்திருக்கச் செய்ய, சுவிசேஷ வசனங்களின் இணைப்பு கதைப் பகுதியின் உபவிளக்கமாய் தொடர்ந்து வர, 'மேலோட்ட விவரணப்படி' எலினாரின் கண் நோய்க்கான மருந்தினை தேடி அடைவதை சிக்கலில்லாமல் விலக்கி வைக்கும் உயிரோட்டம் 'புதின - நாட்டார்' மொழியும், சிந்தனை சக்தியும்.

இதை வெளிப்படையாக இல்லையென்றாலும்  நண்பர்களிடத்தில் பேச்சுப்போக்கிலாவது ஒப்புக்கொண்டே தீர வேண்டும்.

தமிழில் அத்தகைய முதிர்ச்சியான நிலை இந்நாள் வரை உருவாகவில்லை.

(தாண்டவராயன் சரிதத்தை புதிய பிரதியென்றே உச்சரிக்கும் நீலகேசியின் "சொற்களற்ற நூல்" அல்லது அவள் தன் இறுதி காலத்தில் அவசர அவசரமாக எழுதிய "வசன பூசண வாக்கிய கதை" என்ற வெளிவராத புத்தகத்தின் சில பகுதிகளிலிருந்து)

இந்த ஜீவன், சக விந்தணு நீலகேசியின் "வசன பூசண வாக்கிய கதை" - யின் மீத பகுதியின் தேடலில்...

Sunday, July 23, 2023

புனைகதையுருவாக்கம்

முதலில் காட்சியுரு செய்த ஒன்றை மொழியின் வடிவில் பார்ப்பது ஒருவகைப்பாடு. 

மொழியை மட்டுமே பிரக்ஞையாக வைத்து எழுதுவது மற்றொரு வகை.

சொல்ல வந்ததை சாதாரண மொழிக்குள் வைத்துவிட்டு ஆங்காங்கே அசாத்திய தருணங்கள் தன்னியல்பாக உருவாகி வருவது இன்னுமொரு வகை.

புதுமையான சொல்முறை உத்தியில் கதைகளாக்குவது, தன்னனுபவ கதைசொல்லல், மேட்டிமை வெளிப்பாட்டு புனைவெழுத்து, வாசிப்பின் தாக்கங்களில் பிரதிபலித்தலாக அல்லாமல் முழுமையாகவே போலச்செய்தல் முறை, நூலாக்க/ எழுத்தாள பிம்ப ஏக்கத்தோடு ஆர்வமிகுதியில் எழுதப்படும் படைப்பு என அனைத்து சிந்தனை நோக்கோடு எழுதப்படும் படைப்புகளும் மேற்கூறிய ஏதேனுமொரு கூறுமுறையைப் பின்பற்றி படைக்கப்படும். இதில் சில விடுபடல்களும் இருக்கலாம்.

நவீன தமிழ் இலக்கிய உலகில் பல படைப்புகளும் வாசிக்கப்படாமல் தாமதமாக கவனம் பெறுவதும், எழுதப்பட்ட ஆரம்ப நிலையிலேயே பரவலாக கவனம் பெற வைக்க அனைத்து முயற்சிகளும் நடைபெறுவதுமாக இருவகை வாசிப்பியல்புகள் உள்ளன.

முழுமுற்றாக எழுத்தாளரின் எழுத்து நேர்மையால் உந்தப்பட்டு தீவிரமான கலையாக்கத்தைக் கொண்டாடுவதும், நட்புவட்ட எழுத்தின் மீது விமர்சனமற்ற பார்வையோடு அணுகுவதும், போற்றுதல் மூலம் தன்னெழுத்தை முன்னிறுத்த முனைவதுமாக படைப்பைக் கொண்டு சேர்ப்பதில் பலவகைகள்..



கூட்டு நனவலி அச்சம்

அநேக துர்நிகழ்வுகளின் கூட்டு நனவிலி உளவியல் நுட்பமான பயத்தை விநோத வடிவில் கொண்டுள்ளது.

 எல்லா நேரங்களிலும் அதிகாரத்தின் வட்டத்துக்குள் மிகவும் வசதியாகவும் அனைத்து விதங்களிலும் சிறப்பாகவே இருப்பர். இத்தகைய வாழ்வியலில் வெறுப்புணர்வின் வழி உருவான பயம், அழித்தொழிப்பை கண்மூடித்தனமாக வரவேற்கும்.

பெரும்பாலான இனப்படுகொலைகள், சாதிய வன்கொடூரங்களின் காரணங்களுள் ஒன்றாக நனவிலி மனதிலுள்ள பயம் என்ற உளவியல் உள்ளது.

காலனியா? சேரிப்பகுதியா? வேற்று மதத்தவர் வசிக்கும் பகுதியா? அரசுக் குடியிருப்பா? இவ்விடங்களின் ஒவ்வாமை உருவாக இதே அச்சவுணர்வும் ஒரு காரணம்.

காலகாலமாக பழக்கப்பட்டு உருவாக்கப்பட்டதால் ஆழ்மனதில் சேகரிக்கப்பட்டு ஒவ்வாமையாகவும் , வெறுப்புணர்வாகவும் வெளிப்படுகிறது.

அதிலிருந்தே கருத்தியலும் கட்டமைக்கப்படுகிறது. 

அப்பட்டமாக வெளிப்படுவதைவிட,  பதியப்பட்டு ஒளிவுத்தன்மையோடு இருப்பதாலேயே நனவிலி அச்சம் ஒரே நேரத்தில் ஆபத்தானதாகவும், சிந்தனையின்மையோடும் செயல்படக்கூடியது. 

பல உதாரணங்கள் சொல்லலாம். சமீபத்திய மணிப்பூர் இனப்படுகொலைகள் நிகழ்வதில் நனவிலி அச்சம் பெரும்பங்கு வகிக்கிறது. 

 சட்டமுறைமையோடு கையாளப்படவேண்டிய நிலமும் அதன் உரிமையும் கலவரமாக வடிவம் பெற பாசிசம் உருவாக்கிய கூட்டு சமூக அச்சம் அசாதாரணமானது.

நீண்ட கால வரலாற்றில் அடிப்படைவாதம் உள்நுழைந்தால் இத்தகைய பேராபத்துகளே நிகழும்; என்றென்றைக்குமான உண்மை.

நனவிலி அச்சம் காரணிகளுள் ஒன்றுதான், தீவிர உரையாடலுக்குள் கொண்டுவரவேண்டியது. பார்ப்போம்....

Wednesday, July 19, 2023

யதார்த்தவாத கதையாடல்

புனைகதைகளை மாய யதார்த்தவாத,  பின்நவீனத்துவ கோட்பாடுகளாக அதன் பின்னணியிலிருந்து உரையாடல்களை விரிவாக்குவது ஒருபுறமிருக்க அதே படைப்புகளை யதார்த்த பரிமாணங்களுக்குள் கொண்டு வருவதும் பிழையல்ல. பா.வெங்கடேசனின் கதைத்தொகுப்புகள் கோட்பாட்டுவாதங்களுக்குள் விமர்சகனை எளிதாக சிக்க வைப்பதை அங்கொன்று இங்கொன்றாக எழுதப்படும் கட்டுரைகளின் மூலம் கிடைத்தாலும் படைப்புக்குள் நேராக, சூட்சும லாவகத்தோடு எழுதப்பட்டு வாசிக்கப்படும் யதார்த்தங்களை வாசிப்பின்போதே பிடிபட நேர்வதும், உருவாகிக்கொண்டிருக்கும் தருணங்களும் ஏராளமானது. பாகீரதியை அவரது உறவினர் வசைபாடி வீட்டிற்குள் சேர்க்காமல் துரத்திவிடுவார். உறங்காப்புளியோடு வெளியேறும் பாகீரதிக்கு வேறொரு காலத்தில் கனவுகளுக்குள் யதார்த்தம் படிந்து ஒருவித எதிரியக்கத்தை ஏற்படுத்திவிடும். பௌதீக இன்மையும் பாகீரதியின் இருப்பும் ஒரே யதார்த்த உலகில் நிகழும் இருவேறு மாயங்களாக இல்லாமல் காலப்பின்னியக்கமாகவும் வரலாற்றை நிகழ்த்திக்கொண்டிக்கும் தற்தருண யதார்த்தப் பிரக்ஞைக்குள் உலவும் மனிதர்களின் பிறழ்பட்ட நிகழ்வுகளாகவும் மாறிவிடுகிறது.
இங்கு மனிதர்கள் பிறழ்வதில்லை, அவர்களுடைய யதார்த்தங்கள் சிக்கலாகி பிறழ்ந்துவிடுகிறது. கனவாக ஒன்றை அனுபவிப்பவர்  முரண்களையே  யதாத்தங்களின் பெருமகிழ்ச்சியாக்கி ரசிக்கிறார். 


Monday, September 11, 2017

தமிழ் தேசியம் நிகழ்ந்த பின்னரும் சாதியமைப்பு இருக்கவே செய்யும். தற்போதைய சூழல் அப்பேற்பட்டது. மறுபக்கம், சாதியை ஒழித்தல் என்ற செயல்பாட்டு முறை நீண்ட காலநிலையைக் கொண்டது. நாளையோ இன்னொரு மூன்று மாதங்கள் கழித்தோ சாதி அழிந்துவிடாது. உலகம் பெருவெடிப்பிலிருந்து சிதறி உயிரியல் தன்மையுள்ள ஒரு புதிய கோளாக மாறியதைப் போல மிக நீண்ட தொடரியக்கத்தை தன்னிடையே கொண்டது. முழுமையாக முடிவுற ஓரிரு நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டியிருக்கும்.

காரணம், சாதியம் ஒற்றைப் படிநிலையான கருத்தியலல்ல. பல நுண் அலகுகளை தனக்குள்ளே சேர்த்துக் கொள்ளும் தன்மையுடையது என்பதால் மிகக் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. முதலாளியம், லிங்கமையவாதம், பேரினவாதம், நிலப்பிரபுத்துவம் போன்றவற்றை மேலும் வலுப்படுத்தக்கூடிய கருத்தியலாக சாதியம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றது.

சாதியை ஒழிப்பதற்கான செயலூக்கம் வழிவகையாக/சுழலாக (மீள நிகழ்த்துதலின் வினை நகர்வு) சமூக உரையாடலின் பதிவுகளில் நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அந்த நினைவுபடுத்துதலினூடே சாதி ஒழிப்பிற்கும், சாதிய உணர்வின் அழுத்தம் ஒன்றுமில்லாமல்போகவும் செய்யக்கூடிய சாத்தியங்கள் பிறக்கக்கூடும். சாதியதன்மையிலிருக்கக்கூடிய உளவியலில் சமூக உரையாடல்களில் நிகழும் ஒலிக்குறிகள் அதாவது சிந்தனைகளாக பண்பு மாற்றமடையக்கூடிய கருத்தியல்கள் (சாதியம் குறித்த உரையாடல்கள் / கருத்துப்பகிர்வுகள்) பதிவுறும்பொழுது முழுக்க முழுக்க அது சாதி ஒழிப்பைப் பற்றியவாறு நிகழுமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

ஏனெனில், ஒலிக்குறிகளே நிகழ்நிலை சப்தங்களாக உருவாகி உரையாடல்களில் பதிவடையும். உரையாடல்கள் சம்பவங்களாக உருப்பெற வைக்கக்கூடிய கருத்தியல்களின் விதைப்பகுதி. இவ்விதைப்பகுதியில் நிகழும் நுண்மையான மாற்றமே படிநிலைகளாக இயங்கிவரும் அனைத்து சமூகங்களின் சிந்தனையாக்கத்தில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும். 

அயோத்திதாசர், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களாலும், சோ.தருமன், பூமணி போன்ற புனைவெழுத்தாளர்களாலும், டி.தருமராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் வரையிலான கட்டுரை எழுத்தாளர்களாலும் இத்தகைய ஒலிக்குறிகளே மேலும் மேலும் சமூக உரையாடல்களில் வெவ்வேறு காலகட்டங்களில் சேர்க்கப்படுகின்றது.  இதன் நீட்சியே ரஞ்சித்தும். 

மேலோட்டமாக இதை தலித் அரசியல் என்ற சொல்லாடலால் அழைக்கப்பட்டு வந்தாலும் கருத்தியல்களால் பிளவுறக்கூடிய மக்களின் நடுவில் சிந்தனை மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்களை இத்தகைய ஒலிக்குறிகள் ஏற்படுத்துகின்றன.

இதனூடாக தமிழ் தேசியத்தைப் புரிந்துகொள்ளுகையில் சாதியோடுகூடிய தேசியத்தையே அது முன்வைக்கிறதென்ற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறக்கும் ஒவ்வொருவரின் பேராசையாக மாற்றப்பட்டுவிட்ட சாதி இந்துக்களிடமிருந்து வெளிப்படக்கூடிய தலித் அரசியல் ஒரு வகையில் நிகழாதபட்சத்தாலும் ஒவ்வொருமுறையும் அக்குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே பேசவேண்டிய கட்டாயத்தினாலும் தலித் அடையாளத்திலிருந்து விடுபடாமல் சமூகப்பிரச்சினைகளில் அதில் ஒன்றான சாதியத்தைப் பற்றியும் நினைவூட்டவேண்டியதாகிவிடுகிறது. 

இதன் பின்னணியில் சாதி ஒழிப்பு குறித்த தொடர்ந்த உளவியலியக்கமான மீள நிகழ்த்துதலின் வினை நகர்வு மட்டுமே செயல்படுகின்றது என்பது நுண்மையாக மறைந்துள்ள காரணம். இங்கு மீண்டும் பலமுறை வலியுறுத்தப்படும்போது அதற்கான குரல் ஓங்காதபட்சத்தில் எதிர்நிலை கருத்தியலால் சாதியம் எப்பொழுதும்போல தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும்.

ஆதலால், சாதியற்ற தமிழ் தேசியம் கடினமானது. அதிகபட்சம் கா.சிவத்தம்பி யாழ்ப்பாண சமூகத்தை ஆராய்ந்து அதன் சமூக அமைப்பிலுள்ளபடி கட்டுப்பாடுள்ள சாதிகள் (Bound Caste) , கட்டுப்பாடற்ற சாதிகள் (Unbound Caste) [யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் - பக்: 16] போன்ற ஒருவகை பிரிவு (Type)  வேண்டுமானாலும்  ஏற்படலாமே தவிர தமிழ் தேசியத்தால் சாதியத்தை ஒழிப்பதென்பது யதார்த்தமானதல்ல.

சாதி ஒழிப்பு சார்ந்த சிந்தனைப்போக்குகள் முதலில் சாதி இந்துக்களிடமிருந்தே உருவாக வேண்டும். அதுவே சாதி ஒழிப்பின் முதல் படியும், ஆக்கப்பூர்வமான நகர்வும். இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பட்ட சமூக அவநம்பிக்கைகளின் தொடர் உரையாடல்களில் சாதியத்தையும் இணைத்தே பேச வேண்டும். சமூகத்தில் இதன் பதிவுகள் கடத்தப்படும்பொழுதுதான் சாதியத்தை முழுமையாக தகர்த்தெறிய வாய்ப்பு ஏற்படும்.

அதற்கான நம்பிக்கை தற்போதுவரை  இல்லை என்பது பெரும்பாலானவர் அறிந்திராத ஒன்று.

Saturday, September 2, 2017

அதிகார மையத்துக்கு எதிரான தோல்வியால் நிகழும் தற்கொலைகளை அர்த்தப்படுத்திக்கொள்வதில் முதன்மையான சிக்கலாக "தனிமனித குணாதிசயம் சார்ந்ததாக வரையறுத்தல்" என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமான கருத்து.

இவ்வழக்கப்பட்ட கருத்தை எதிர்ப்போரில் அனைத்து மாற்றுச் சிந்தனையாளரும் அதற்கு எதிரான பக்கத்தில் நின்றுகொண்டு "வழக்கமான" கருத்தை வெளிப்படுத்தியவரோடு வாதிடுவது பாரம்பரியப்பட்டதல்ல. புதுமையானது.

நூறாண்டுகளுக்கு முன்னர், தன்னை மாய்த்துக்கொள்ளும் ஒருவரின் மரணத்தைப் பற்றிய உரையாடல்களில் "வழக்கமான" சிந்தனை முறையின் விகிதமே மேலோங்கியிருந்தது. ஆனால் இன்று அதன் சாத்தியங்கள் நவீனப்பட்டு விரிவடைந்திருக்கின்றன.

தனிப்பட்ட குணாதிசயங்களை குறிப்பிடுவோரின் கருத்துப்படி மரணித்தவர் குற்றமிழைத்தவராக புரிந்துகொள்ளப்படுகிறார். தடைகளை மீறி வாழ்வதற்கு முயற்சிக்காமல் கோழையாகவும், பொறுப்பற்றும் தன்னைத் தானே கொலை செய்துகொள்வது என்பது முட்டாள்தனமானது என்றும் அனைத்தையும் தாண்டி வாழ்பவரே முதிர்ச்சியானவர், கல்வி பயின்றவர் என்பதும் இவர்களுடைய சிந்தனை வடிவம்.

தற்கொலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும் முதலும் முடிவுமாக பாதிப்படைந்தவரே குற்றவாளி என்ற விதத்தில் யோசிக்கும் பொதுமனம் இவர்களுடையது.

இதற்கு எதிர்ப்புறமுள்ள மாற்று சிந்தனைக்காரர்கள் தற்கொலைக்கான காரணம் சமூக அரசியல் தொடர்பாக இல்லாத பட்சத்திலும் வேறு எந்த தனிமனித காரணங்களிலும்கூட "வழக்கமான" கருத்தியலாளர்களின் சிந்தனைப் போக்கை ஏற்றுக்கொள்வதில்லை. 

அதாவது, ஒரு ஆண் அல்லது பெண் காதல் தோல்வி/கடன் தொல்லை/மானபங்கம்/இழிவுபடுத்துதல் போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டாலும், தற்கொலை செய்துகொண்டவரையே குற்றவாளியாகப் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக துயரத்திலும் அதற்கான ஆறுதலிலும் பங்குகொள்கின்றது.

தற்கொலை சம்பவம் ஒரு சமூக அரசியல் பின்னணியில் நிகழும் பட்சத்தில் "வழக்கமான" சிந்தனைப்படி தற்கொலையாளனே குற்றவாளி என்பதை தீவிரமாக எதிர்ப்பதோடு தற்கொலைக்கான உண்மையான காரணங்களாக விளங்கும் அரசு இயந்திரம் அதனோடு சேர்ந்தியங்கும் முதலாளியம், சாதியம், நிலப்பிரபுத்துவம், உலகமயமாக்கம் போன்ற கருத்தியல்களை மிகவும் பலமாக எதிர்க்கின்றது.

சமூக-அரசியல் பின்னணியில் நிகழும் தற்கொலைச் சம்பவங்கள் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்ட கொலை என்பதே மாற்று சிந்தனையாளர்களின் ஆழமான நம்பிக்கை. மிகவும் சரியான நம்பிக்கையும் கூட. 

அனிதாவின்  இறப்பிற்கு முன்பிருந்து தற்கொலை வரை தற்கொலையின் இயக்கத்தை கீழுள்ளவாறு சொல்லிப்பார்க்கலாம்.

அனிதா --> உயிர்நிலை இயக்கம் 

மருத்துவர் --> பண்பாட்டு மேலாண்மை நிலை 

நீட் --> முதலாளிய அலகு

தற்கொலை --> உச்சபட்ச எதிர்ப்பு

உச்சபட்ச எதிர்ப்பின் முடுக்கம் --> அதிகார மையம்

இந்த தொடரியலில் அனிதாவின் ஒரே கனவாக இருந்த மருத்துவர் பட்டம் அதிகார மையத்தால் மறுக்கப்படுகிறது. மருத்துவர் என்ற பட்டத்தை அனிதாவின் கண்ணோட்டத்திலிருந்து வெறும் பொருளாதார மூலமாக (Economical source)  மட்டுமே பார்க்க முடிவதில்லை. தன்னைச் சூழ்ந்திருக்கும் தன்னோடு சேர்ந்த சனங்களின் பண்பாட்டு உயர்வாகவே இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முதலாளிய அலகுகளின் உலகளாவிய பண்பு உயிர்நிலை இயக்கங்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் அபகரிப்பதுமேயாகும். இதை செயல்படுத்த மத்திய/மாநில அரசுகளின் தொடர்பு தேவைப்படுகிறது. 

காடு, மலை, ஏரி, கடல், நதி, நிலம், மனிதன் போன்ற உயிர்நிலை இயக்கங்கள் எப்பொழுதும் முதலாளியத்தின் கட்டுக்கோப்பிற்குள் இருக்க வேண்டும் என்பதே அனைத்து அரசுகளின் ஒரே கடமை.

ஆகவே, முதலாளியத்திற்கு எதிராக போராடிய உயிர்நிலையை ஒடுக்கும்பொழுது முதலாளியத்திற்கு வெற்றி கிடைக்கின்றது. 

இங்கு நீட் என்ற அலகு தன்னை எதிர்க்கவரும் உயிரியக்கத்தைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இதனை இயக்கும் மத்திய அரசு முதலாளிய வன்முறையாக அனிதாவை படுகொலை செய்து தனது தடையின் முதல் சிறுகல்லை தூக்கி எறிகின்றது. அனிதாவின் பக்கத்திலிருந்து வெளிப்படும் உச்சபட்ச எதிர்ப்பாக உயிரியக்கத்தின் தொடர்நிலை முடிவுறுகின்றது. இதற்கான தூண்டுதல் அதிகார மையத்திலிருந்து அனிதாவிற்கு கடத்தப்படுகின்றது.

மேலும் தொடர்ந்த ஆய்வியல் தரவுகளிலிருந்து கண்டுகொள்ளப்படவேண்டிய துல்லியமான காரணங்களை,  பொதுமனம் எளிதாக தற்கொலை செய்துகொண்டவரின் மீதே அனைத்து பழிகளையும் சுமத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் இரண்டு.

சமூக காரணங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களை குறைகூறுபவர்களின் சிந்தனை வடிவத்தில் சாதியம்/முதலாளியம்/அதிகார பண்பு போன்றவையும் ஒன்றிணைந்திருப்பதினால்தான் பொதுமனத்தின் கருத்தினை எதிர்க்க நேரிடுகின்றது என்ற மாற்று மனத்தின் கருத்தியலை அறியாமல் இருப்பது முதல் சிக்கல்.

அதாவது அனிதாவின் தற்கொலையில் முதலாளியமும், அரசதிகாரமும், சாதியமும் நீட் என்ற வடிவில் தொடர்பில் இருந்து வந்திருப்பதால் அவருடைய மரணத்தில் அவரையே குற்றம் சாற்றுபவரும் அரசின், சாதியத்தின், முதலாளித்துவத்தின், நிலப்பிரபுத்துவத்தின் ஆதரவாளர்களாக மாறிவிடுகிறார்கள் என்ற உண்மையை உணராது போவது.

இரண்டாவதாக, அவர்களுடைய அறியாமையை அப்பாவித்தனம் என்று ஏற்றுக்கொண்டு விலக முடியாமல் போகும்  மாற்று மனத்தின் தவிப்பு. 

வழக்கமான மன அமைப்பு காலவெளியில் கலை இயக்கங்கள் சமூகங்களோடு தொடர்புகொள்ளும் விகிதாச்சாரம் உயரும்பொழுது தன்னை திருத்திக்கொள்ளும் என்பது என் நம்பிக்கை.

Sunday, June 4, 2017

வே.நி.சூர்யா, வெங்கட் (நிழல்), திரு (சீனுலதா) - கவிதைகள்

"சில சமயங்களில் புதியவர்கள் எழுதும் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்த கவிதைகளை விட சிறப்பாக அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்டவற்றை மாபெரும் கவிதை சந்தையிலிருந்து அடையாளம் காண்பதென்பது அரியதொரு செயல்"

1)  வே.நி.சூர்யா 

இருப்பிற்கும், இன்மைக்கும் இடைப்பட்ட வெளியை பரிசோதிக்கும் முயற்சிகளும், சமூகத்தின் ஒற்றைச் சாய்வு முறைமையின் மறுபக்கத்திற்கான சொற்களும் கவிதைகளாக மாறும் சமயம் நினைவிருத்த வேண்டிய பகுதிகளின் பயிற்சியே சூர்யாவின் கவிதைகள். 

மாறாமலிருக்கும் இவ்வுலக சௌந்தர்யரத்தின் மேலான சொத்தை அடியாக சில கவிதைகள் தேங்கி நிற்கின்றன என்பதே மேலும் சிறிது காலம் கழித்து எழுதப்பட வேண்டிய கவிதைகள் அவையென்பதை வாசகனுக்கு உணர்த்துவதோடு எந்த குறையையும் தன்னுள் கொள்ளவில்லை. 

சூர்யாவின் கவிதைகள் அவர் வரிகளுக்கு மாற்றாக காலங்களில் பேசப்படலாம். 

http://suryavn.blogspot.in/

வறுமை ஒழிக்க ஒரே வழி
------------------------------------------
நாமெல்லாம் இன்னொருவரின் கற்பனையாக இருக்கலாம்
அப்படி இருந்தோம் எனில்
அந்த இன்னொருவர் இன்னொருவரின் கற்பனையாய் இருக்கலாம்
இது தொடர்வரிசை.
முடிந்தால் ஒன்று செய்யவோம்
என்னை உங்கள் கற்பனையில் பயன்படுத்த பணம் என்று அந்த இன்னொருவரிடம் இருந்து வசூலிப்போம்
இப்படியாவது இந்த முதலாளித்துவ உலகில் பணக்காரன் ஆகிவிடுவோம். 

***

பிளந்தாயிற்று
----------------------

புலம்பிகொண்டே இருக்கும்
நாக்கை அறுத்தாயிற்று 
கிறுக்கிக்கொண்டே இருக்கும்
கையை அறுத்தாயிற்று
நடந்து கொண்டே இருக்கும்
காலை வெட்டியாயிற்று
மூச்சு விட்டு கொண்டே இருக்கும்
இதயத்தை பிளந்தாயிற்று.
அமைதியாகவே இருக்கும் மீதியை
என்ன செய்வதென்றே தெரியவில்லை

***

கடிகாரம் சொன்ன கதை 
--------------------------------------

புதியதாக கட்டிய வீடு
வீட்டின் சுவர் எல்லாம் கடந்த காலம்
வீட்டின் சன்னல் எல்லாம் எதிர்காலம்
வீட்டின் உள்ளே எல்லாம் நிகழ்காலம்
வெளியில் இருந்து பார்த்தால் வீடு
கண்ணுக்கு தெரியாது
அந்த இடத்தில் அடையாளத்திற்கு
வேப்பமரம் நட்டுவைத்து திரும்பி பார்த்தேன்
பயங்கரமான மரமாக வளர்ந்திருந்தது
யாரை பொறுத்த வரைக்கும் அங்கு வீடு இல்லை
ஆனால் என் கடிகாரத்திடம் கேட்டால் சொல்லும் டிக் டிக் என திகிலுட்டிக்கொண்டே அந்த வீடு கட்டப்பட்ட கதையை
தேர்ந்த கதைசொல்லி என் கடிகாரம்
ஆம்
உன் கடிகாரமும்
உன் கடிகாரத்தை கொடு
என்ன கதை என கேட்போம்
வா நண்பா

***

2) வெங்கட் (நிழல்)

முழுமையாக அழகியலின் பாற்பட்டு அதன்மேல் தீராத நம்பிக்கையுள்ள ஒருவரின் கவிதைகள் இவை. முதல் ஒலியில் கரையும் இசை, பார்த்த பொழுதில் நிகழும் இராசாயன இரகசியம், அதீதமில்லா கவர்ச்சி என்பதே வெங்கட் கவிதைகளின் அடிப்படை. அதில் கவிஞனின் ஆன்மா செயலுறும் பாங்கு இயற்கையோடு தோய்ந்த வரிகளை மீட்டெடுக்கின்றன.

தானாக சுலபமற்று நிகழும் அரிய தருணங்களின் காட்சிப் பிரதிகளாய் இருக்கின்றன இவரது கவிதைகள்.  அழகான இசை, ஓவியம், இயற்கையின் நிச்சயமில்லா காட்சிப்புலன்கள் என்பதோடு குழந்தைகளை ஒத்த வாழ்வோடு எழுதப்படும் கவிதைகளோடு இன்னமும் சில புதிய குரல்களை வரவழைப்பது ஒன்றே வெங்கட் அவருடைய கவிதைகளின் பூரணத்தை நிறைவுபடுத்தக்கூடிய வழியாக இருக்கும்.

குழந்தைகளோடு ஒருமித்து வாழும் படைப்பாளிக்கு, குழந்தைகளுக்கும் கவிதைகளுக்கும் இடைப்பட்ட வேற்றுமையை அளவிடுவது அத்தனை சுலபமல்ல. 

http://sollinnizhal.blogspot.in/

கார்கால நிறத்து ஆகாயத்திற்கருகில்
விருட்சமொன்று
ஒரு நுறு பட்சிகளை அணைத்தபடி
மிதக்கிறது.
நின்ற கணத்திலிருந்து அசைந்த கணம்
திசையெங்கும் சிதறுகிறது மரத்தின் நிழல்.
என் இருதயத்தின் தொலைதூரத்து
சொற்களெல்லாம்
கூடுகட்டத் திரும்புகிறது
படபடத்து இப்போது.

*** 
எந்த அறிகுறியுமற்று
ஏதோவொன்றாக விடிந்துவிடுகிறது 
சில பொழுது. 
இசையாக
காற்றில் மிதந்து செல்கிறது உடல் 
இலேசாகவும் கனமாகவும் இல்லாது. 
ஒரு சிக்னல் தேவைப்படுகிறது,
அந்த நிறுத்தத்தில் 
அருகிலொரு வாகனம் தேவைப்படுகிறது, 
அதில் ஒரு சின்னஞ்சிறு சிறுமியின்
ஏதாவது இரண்டு சொல் தேவைப்படுகிறது 
இந்த நாளை அநாதையாக்காமல்  
தொட்டுத்தூக்க.

***

மேசைமேல் நின்று
படபடக்கும் புத்தகத்தை
இந்தப்பக்கமிருந்தும் அந்தப்பக்கமிருந்துமாக
இருவர் வாசிக்கிறார்கள்.
ஒரே கணத்தில் ஒரே சொல்லை
இருவரும் சொல்லும் பொழுது
கவிதை மறைந்து
புத்தகம் தொலைந்து
கண்ணாடியாகிறார்கள்
இவனுக்கு அவனும்
அவனுக்கு இவனும்.

***

ஹிட்லர்
பழைய தூரிகைப் பெட்டிக்குள்
பிரியம் நிறைத்து ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்.
நாள் தவறாமல்
அந்தத் துப்பாக்கியை இதமாகத் துடைத்துவிடுவார்.
வைக்கும் நொடிக்குமுன்
யாரும் கண்டுவிடாதபடி கண்களை சுழற்றிவிட்டு
அன்பொழுக அழுத்தி முத்தமிடுவார்.
ஸ்பரிசம் கிட்டாத ஏக்கத்தில்
கண்ணாடி சன்னல் வழியே
எச்சில் ஒழுக்கிக்கொண்டிருக்கும் வளர்ப்பு நாய்கள்.
ஈரக்காற்றாலான தருணம் ஒன்று
எங்கிருந்தோ பீடிக்க
சிலநேரம் மிரண்டு
திசைகாணாது தூக்கி எறிவார்.
அவரது செல்லமான நாய்க்குட்டிகளோ
இளைப்பெடுக்க பற்றிவரும்
அவருக்கு நேராகத் துள்ளிக்கொண்டு.
தோட்டாக்கள் இழகும் காலமொன்றில்
தூரிகையால் அழுத்திக்குழைத்து
தன்உடலில் துப்பாக்கியை வரைந்துவிட்டு
உறங்கப்போனார்.

***


3) திரு (சீனுலதா)


திரு சுவாரசியமான கவிஞர். புதுமை, மாற்று சொல்லாடல், ஒரே நிறத்தை வேறொரு வடிவில் கவிதையாக்கல் போன்ற முயற்சிகளை முதிர்ச்சியோடு வெளிப்படுத்துபவர். 

சமூக அவலங்களையும், வன்மமிக்க அரசியல் நெறிகளின் தூய தர்மங்களையும் பகடி செய்யும் கவிதைகள் மறுபக்கம் ஆண்Xபெண் உறவு மையத்தின் இணைக்க முடியாத சரடுகளை தீராத அன்பின் எளிய வழிகளில் முன்னிறுத்தும் கவிதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

தத்ரூபற்ற தன்மைகளால் நிறையும் முக்கியமான கவிதைகள் செம்மையைக் கோரும் தருணங்களை வாசகன் கடப்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிடுவது முதிர்ச்சியின் பலமின்மையில் விழும் ஓட்டை சரிபாதி கவிதைகளே சமன் செய்கின்றன.

யோசித்து, பொறுமையாக செயல்படும் திருவின் கவிதைகள் தொகுப்பாக வெளிவரும் காலத்தில் அவை தனித்து நிற்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.


என்ன வண்ணமோ மனசுல....
------------------------------------------------------


இப்பெருநகரத்தின் நெரிசலான நடைபாதையில்
அமர்ந்தபடி குரலெடுத்தால்
ஒரே பாடல், குமிழ்களாய் மோதி
வர்ணங்களாய் உடைந்தொழுகுகிறது
வானத்துக் கருமை
கால்களிலிருந்து சொட்டியபோது
நட்சத்திரங்களை போல் மின்னி மறைவுற்றார்கள்
மாம்பூ வர்ணத்தின் இளகிய தசை
புளித்த இனிப்பை கண்களுக்கு வழங்கிச்சென்றது
களிநடை பயின்ற கத்திரிப்பூ வர்ணத்திற்க்கும்
கணுக்காலில் சிவந்தொழுகும் செம்பருத்திப்பூ தருணத்திற்க்கும்
கொலுசு செய்து தோற்றுப்போவதில்
என் பாடல்கள் முனைப்புகாட்டுகின்றன
பாதசாரிப் பெண்டீர்களின்
வனப்பான கால்களும் வண்ணவண்ணக் கால்சாராய்களும்
கண்களைப் பறிக்கும் பொழுதுகளில் – என்னையறியாமல்
ஒரு அபஸ்வரத்தை மீட்டித்தொலைக்கின்றேன்
இந்நகரத்தின் எல்லா நடைபாதையிலும் அமர்ந்தாயிற்று
நெஞ்சிலெழும் அப்பாடலைச் சொல்லி எந்த குற்றமுமில்லை
அது என் குருட்டு மனைவிக்கு பிடித்தமான பாடல்
எனக்கும் அவளுக்குமான அந்தரங்க பொழுதுகள்
வர்ணங்களின் விநாடிமுள்ளில் துடித்துக்கொண்டிருப்பதாக
நம்பிக்கை கொண்ட ஒரு நாளில்
பழுப்புநிற பஞ்சுப்பொதி காலொன்று
பேரிரைச்சலின் கூட்டிசைப்பாக
அபஸ்வரத்தை மீட்டித்தொலைத்தது
அதிர்நடையிட்ட செம்பழுப்புத் தொடைச்சதைகள்
பிரியாணிப் பொட்டலமாய் உதிர்ந்து விழுந்தபோது
வறண்ட தொண்டையும் இருண்ட கண்களுமாய்
நான் ஒரு லெக்பீஸை கடித்து முடித்திருந்தேன்
துடித்தடங்கிய பழுப்பு வர்ணம்
மனைவியின் பொட்டைக் கண்களை நினைவூட்டியபோது
ஒவ்வாமையின் காரம் கண்ணீராக வழிந்தூறியது
கறிச்சதைகள் நீக்கம் பெற்ற லெக்பீஸ்துண்டு
என் போலியோ கால்களை அப்பட்டமாக நினைவூட்டியபோது
கசிந்துகொண்டிருந்த இசையின் நாண்புடை படீரென அறுப்பட்டது

***

உனக்கும் எனக்குமான வெற்றிடத்தில்
ஒரு உறவை கட்டியெழுப்பியாக வேண்டும்
வெற்றிடத்தை வெளிப்பூச்சுக்கொண்டு மறைக்கும் கலையை
உன் பாணியில் நீயும் என் பாணியில் நானும்
மற்றெல்லோரைப் போலவும் கற்றுத் தேர்ந்திருந்தோம்
காற்று புகாத வெற்றிடத்தில் நீரையும் நெருப்பையும்
நாம் சமைத்தாக வேண்டும்
சீரில்லாத அலைவரிசையில் இருவரின் கைகளும் துழாவி ஒய்ந்தன
இன்னதென்றில்லாத ஒழுங்கில் உறவு எழும்பினாலும்
வடிவங்கள் குலைவது வெற்றிடத்தின் இயல்பு
குணவதியே
என்னிடம் ஆணி இருக்கும்
உன்னிடம் அன்பு இருக்கும் தானே
குலைந்த சட்டகத்தில் இடம் பார்த்து ஆணியை வைக்கிறேன்
அன்பு கொண்டு ஓங்கி அறை
ஆணிக்கூர்மையின் மினுப்பு ஆழமாய் இறங்கட்டும்.

***

உன் கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
நம்மை சுற்றிலும் இருள் படர்ந்தாகிவிட்டது
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை
நாம் எடுத்துவைக்கும் அடுத்த அடி இழுத்துக் கொள்ளும் அதல பாதாளமோ
புதைச்சுழியின் பெருமணலோ
யாரறிவார்
உன் கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
இவ்வுலகில் யாருக்கும் யாரும் துணையில்லாத போதும்
பாசாங்கு செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் -உன்
கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
நடுங்கும் என் விரலுக்கு
மெலிதான முத்தம் போதுமானதாக இல்லை – ஆயுள் ரேகையென
மூச்சுக் காற்றை கைகளுக்கு நடுவில் பதித்துவை – உன்
கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்

***

முசலுக்குட்டி நஸ்ரியா மூஞ்சூறு அஞ்சலி

---------------------------------------------------------------------

என் அறைகளில் வலுக்கட்டயாமாக புகுந்துகொண்ட
மூஞ்சூறுவை வெளியேற்ற முடியாமல்
தோற்றப்போது அது பழிப்புகாட்டிச் சென்றது
இடுக்குகளிலிருந்து சின்னஞ்சிறிய தலையை
எட்டிக்காட்டி தன்கூம்பு வாயை குவிக்கும்போது
அறையை முழுவதுமாக வியாபிக்கிறது
நாவை ஒழுங்குசெய்து இடதுகண்ணை சிமிட்டும்
இமை உரசலில் தீ அறையில் பரவி தகிக்கிறது
பசித்திருக்கும் தனிமையை அது சாப்பிட்டபோது
அறையை பகிர்ந்துகொள்ள முசலுக்குட்டி ஒன்று
வம்படியாய் வந்துவிட்டது
பசிதாங்காத நானும் முசலுக்குட்டியும்
சுடச்சுடப் பாலை காய்ச்சிப் பருகினோம்
முசலுக்குட்டி பாலின் வெப்பம்தாளாமல் சாம்பல் ஆனது
சாம்பலிலிருந்து வெளியேறிய மூஞ்சூறுவின் வெப்பமூச்சு
பாலை மீண்டும் சூடாக்கிப் முசலுக்குட்டியை வெளியேதள்ளியது
மாறிமாறிப் பசியாறிய இச்சங்கிலித்தொடர் மயக்கத்தில்
சாம்பல்வடிவ மூஞ்சுறுவை
முசலுக்குட்டி என அழைத்துவிட்டேன்
தன் உடலை மாற்றியதற்காக முசலுக்குட்டி
அறையில் இருந்து கோவித்துக்கொண்டு வெளியேறியது.
பின் ஒருநாள் மூஞ்சூறுவும் அறைபிடிக்காமல்
வெறுத்துப்போய் தானாக வெளியேறிவிட்டது
தகிக்கும் சாம்பலும் அதில் காய்ந்துகொண்டிருக்கும் பாலும்
குறும்பு கொப்பளிக்கும் கண்களும் மட்டும்
அறையில் மிச்சம் இருக்கிறது.
அத்தை பொண்ணு ஆண்ட்ரியா…
தொண்டையில் கூழாங்கற்களை அதக்கியிருக்கும்
என் அத்தை பெண்ணின் குரல்
அடைத்துக் கொண்டு வரும்
செப்புக்குழல் மின்சாரமென பாயும்
ஆகப்பெரிய கலகக்குரலில் அவள்
மாமாக்களின் டவுசரை
அவிழ்த்து சீட்டியடிப்பாள்
டவுசரை பிடித்தபடி
அலறிக்கொண்டு ஓடும் மாமாக்களை
சில சமயம் மஞ்சுவிரட்வது போல்
ஆராவரத்துடனும்
சில சமயம் மஞ்சத்தண்ணீர் ஊற்றுவதுபோல்
ஆசையுடனும்
அவள் குரல் விரட்டித் துரத்தும்
மத்யம சஞ்சாரத்தில்
‘மா’ ‘மா’ என விதவிதமாக
ஆலாபித்து அழைக்கும் அத்தைமகள்
ஓரிடத்தில் பெருங்குரலெடுத்து
மாம்ம்மா என அழுத்தம் கொடுத்து
விரட்டி விளையாடுவாள்
கெளுத்தி முள்ளின் அழுத்தமென
கண்களில் நீர் விட்டு
உச்சம் தொடும் அவ்விடம்
வெறும் குரல் மட்டுமல்ல
என் சக மாமா பயல்களே…
ஐட்டம் சாங் எனும் பிரேதப் பாடல்:
கால்களின் குதியாட்டத்தில்
பிரேதங்களை தனித்தனியாக
பிரித்து கண்களுக்கு
பரிசோதிக்கத் தரும் அவள்
இன்று தன்இடையை
உடலோடு சேர்த்து அந்தரத்தில்
கால் உயர்த்தி ஆடுகிறாள்
இரத்தம் சொட்டும் உதட்டுச்சாயத்தில்
மையிட்டொழுகிய கண்களை வெளியிட்டு
தன் அகாலத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறாள்
காதலியொருவள்:
எனதன்பு காதலியொருவள்
குருவி போன்ற அடக்கமான நீள்வட்ட முகத்தில்
ரேவதியின் சாயலில் சிரிப்பாள்
எனதன்பு காதலியொருவள்
கண்ணாடியணிவித்த மாதவியின் சாயலில்
நெடுநெடுவென தோகை விரிப்பால்
எனதன்பு காதலியொருவள்
வெள்ளை நிறச் சரிகாவென
வட்டமுகச் சாயலில் மூக்கை சிணுக்குவாள்
எனதன்பு காதலியொருவள்
மெலிதாகத் துருத்தும்
அஞ்சலித் தொப்பையில்
சாயலைக் கூட்டுவாள்

எவ்விதச்சாயலும் கலக்காத
தனித்துவ நடிகனாக
அவர்களின் முன்னே
நடிக்க முயன்றுகொண்டிருக்கும் என்னிடம்
பேரன்பும் பெருமழகும் கொண்ட
அனைத்துக் காதலிகளும் ஒற்றைச்சாயலில்
ஒருங்கே இணைகிறார்கள்
உலக நடிகர்களின் வழக்கம் மாறாது
வசனம் மறந்து
கனாக் காலங்களில்
உறைந்து கொண்டிருக்கிறேன்.

எளிதன்றோ…
அஃதெனினும் இனிதன்றோ!
நடிகனாக இருப்பதைவிட
எப்போதும் தள்ளி நிற்கும்
ரசிகனாகவே இருப்பது.

சன்னி லியோனும் சமையல் சாமானும்…
--------------------------------------------------------------------

வறண்டு கிடக்கும் இப்பாலை பிரதேசத்தில்
சன்னி லியோன் சமைந்துகொண்டிருக்கிறாள்
சமைத்துக்கொள்ளும் முன்னமே தன்னை
பரிமாறிக்கொள்ளும் கலையரசி அவள்
நதியில் செல்லும் அன்னப்பட்சி போல்
கால்களை பின்னிப் பின்னி இப்பாலை நிலத்தில்
நீந்தியபடி சமைந்துகொண்டிருக்கிறாள்
சொருகும் அவள் கண்களிலிருந்து விரியும் உடல்
ஆலிவ் இலையை தூவும் பறவையின்
சிறகென அசைகிறது
தூவப்பெற்ற ஆலிவ் இலைகள்
பொய்க்கோப முனிவர்களின் சடாமுடியில்
எச்சமென வீழ்கிறது.
கொதிக்கும் அவள் பாலை உடம்பின்
தளும்பும் மணற்மேட்டின்
அந்தகார நிழலில் இளைப்பாறுகிறேன்
உருகிக் கசியும் அவளின் சமையல் மணத்தில்
புதைமணலையும் சுழிக்காற்றையும்
அவசர அவசரமாகக் கடந்து
சமைந்துகொண்டிருக்கும் அப்பரதேவதையின்
குடவரை கோயில் வாயிலில்
ஆதியந்தம் தொலைத்த அந்தர்யாமியாய்
பசிமறந்து தியானித்துக்கிடக்கிறேன்

***