Pages

Monday, September 11, 2017

தமிழ் தேசியம் நிகழ்ந்த பின்னரும் சாதியமைப்பு இருக்கவே செய்யும். தற்போதைய சூழல் அப்பேற்பட்டது. மறுபக்கம், சாதியை ஒழித்தல் என்ற செயல்பாட்டு முறை நீண்ட காலநிலையைக் கொண்டது. நாளையோ இன்னொரு மூன்று மாதங்கள் கழித்தோ சாதி அழிந்துவிடாது. உலகம் பெருவெடிப்பிலிருந்து சிதறி உயிரியல் தன்மையுள்ள ஒரு புதிய கோளாக மாறியதைப் போல மிக நீண்ட தொடரியக்கத்தை தன்னிடையே கொண்டது. முழுமையாக முடிவுற ஓரிரு நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டியிருக்கும்.

காரணம், சாதியம் ஒற்றைப் படிநிலையான கருத்தியலல்ல. பல நுண் அலகுகளை தனக்குள்ளே சேர்த்துக் கொள்ளும் தன்மையுடையது என்பதால் மிகக் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. முதலாளியம், லிங்கமையவாதம், பேரினவாதம், நிலப்பிரபுத்துவம் போன்றவற்றை மேலும் வலுப்படுத்தக்கூடிய கருத்தியலாக சாதியம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றது.

சாதியை ஒழிப்பதற்கான செயலூக்கம் வழிவகையாக/சுழலாக (மீள நிகழ்த்துதலின் வினை நகர்வு) சமூக உரையாடலின் பதிவுகளில் நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அந்த நினைவுபடுத்துதலினூடே சாதி ஒழிப்பிற்கும், சாதிய உணர்வின் அழுத்தம் ஒன்றுமில்லாமல்போகவும் செய்யக்கூடிய சாத்தியங்கள் பிறக்கக்கூடும். சாதியதன்மையிலிருக்கக்கூடிய உளவியலில் சமூக உரையாடல்களில் நிகழும் ஒலிக்குறிகள் அதாவது சிந்தனைகளாக பண்பு மாற்றமடையக்கூடிய கருத்தியல்கள் (சாதியம் குறித்த உரையாடல்கள் / கருத்துப்பகிர்வுகள்) பதிவுறும்பொழுது முழுக்க முழுக்க அது சாதி ஒழிப்பைப் பற்றியவாறு நிகழுமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

ஏனெனில், ஒலிக்குறிகளே நிகழ்நிலை சப்தங்களாக உருவாகி உரையாடல்களில் பதிவடையும். உரையாடல்கள் சம்பவங்களாக உருப்பெற வைக்கக்கூடிய கருத்தியல்களின் விதைப்பகுதி. இவ்விதைப்பகுதியில் நிகழும் நுண்மையான மாற்றமே படிநிலைகளாக இயங்கிவரும் அனைத்து சமூகங்களின் சிந்தனையாக்கத்தில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும். 

அயோத்திதாசர், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களாலும், சோ.தருமன், பூமணி போன்ற புனைவெழுத்தாளர்களாலும், டி.தருமராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் வரையிலான கட்டுரை எழுத்தாளர்களாலும் இத்தகைய ஒலிக்குறிகளே மேலும் மேலும் சமூக உரையாடல்களில் வெவ்வேறு காலகட்டங்களில் சேர்க்கப்படுகின்றது.  இதன் நீட்சியே ரஞ்சித்தும். 

மேலோட்டமாக இதை தலித் அரசியல் என்ற சொல்லாடலால் அழைக்கப்பட்டு வந்தாலும் கருத்தியல்களால் பிளவுறக்கூடிய மக்களின் நடுவில் சிந்தனை மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்களை இத்தகைய ஒலிக்குறிகள் ஏற்படுத்துகின்றன.

இதனூடாக தமிழ் தேசியத்தைப் புரிந்துகொள்ளுகையில் சாதியோடுகூடிய தேசியத்தையே அது முன்வைக்கிறதென்ற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறக்கும் ஒவ்வொருவரின் பேராசையாக மாற்றப்பட்டுவிட்ட சாதி இந்துக்களிடமிருந்து வெளிப்படக்கூடிய தலித் அரசியல் ஒரு வகையில் நிகழாதபட்சத்தாலும் ஒவ்வொருமுறையும் அக்குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே பேசவேண்டிய கட்டாயத்தினாலும் தலித் அடையாளத்திலிருந்து விடுபடாமல் சமூகப்பிரச்சினைகளில் அதில் ஒன்றான சாதியத்தைப் பற்றியும் நினைவூட்டவேண்டியதாகிவிடுகிறது. 

இதன் பின்னணியில் சாதி ஒழிப்பு குறித்த தொடர்ந்த உளவியலியக்கமான மீள நிகழ்த்துதலின் வினை நகர்வு மட்டுமே செயல்படுகின்றது என்பது நுண்மையாக மறைந்துள்ள காரணம். இங்கு மீண்டும் பலமுறை வலியுறுத்தப்படும்போது அதற்கான குரல் ஓங்காதபட்சத்தில் எதிர்நிலை கருத்தியலால் சாதியம் எப்பொழுதும்போல தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும்.

ஆதலால், சாதியற்ற தமிழ் தேசியம் கடினமானது. அதிகபட்சம் கா.சிவத்தம்பி யாழ்ப்பாண சமூகத்தை ஆராய்ந்து அதன் சமூக அமைப்பிலுள்ளபடி கட்டுப்பாடுள்ள சாதிகள் (Bound Caste) , கட்டுப்பாடற்ற சாதிகள் (Unbound Caste) [யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் - பக்: 16] போன்ற ஒருவகை பிரிவு (Type)  வேண்டுமானாலும்  ஏற்படலாமே தவிர தமிழ் தேசியத்தால் சாதியத்தை ஒழிப்பதென்பது யதார்த்தமானதல்ல.

சாதி ஒழிப்பு சார்ந்த சிந்தனைப்போக்குகள் முதலில் சாதி இந்துக்களிடமிருந்தே உருவாக வேண்டும். அதுவே சாதி ஒழிப்பின் முதல் படியும், ஆக்கப்பூர்வமான நகர்வும். இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பட்ட சமூக அவநம்பிக்கைகளின் தொடர் உரையாடல்களில் சாதியத்தையும் இணைத்தே பேச வேண்டும். சமூகத்தில் இதன் பதிவுகள் கடத்தப்படும்பொழுதுதான் சாதியத்தை முழுமையாக தகர்த்தெறிய வாய்ப்பு ஏற்படும்.

அதற்கான நம்பிக்கை தற்போதுவரை  இல்லை என்பது பெரும்பாலானவர் அறிந்திராத ஒன்று.

Saturday, September 2, 2017

அதிகார மையத்துக்கு எதிரான தோல்வியால் நிகழும் தற்கொலைகளை அர்த்தப்படுத்திக்கொள்வதில் முதன்மையான சிக்கலாக "தனிமனித குணாதிசயம் சார்ந்ததாக வரையறுத்தல்" என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமான கருத்து.

இவ்வழக்கப்பட்ட கருத்தை எதிர்ப்போரில் அனைத்து மாற்றுச் சிந்தனையாளரும் அதற்கு எதிரான பக்கத்தில் நின்றுகொண்டு "வழக்கமான" கருத்தை வெளிப்படுத்தியவரோடு வாதிடுவது பாரம்பரியப்பட்டதல்ல. புதுமையானது.

நூறாண்டுகளுக்கு முன்னர், தன்னை மாய்த்துக்கொள்ளும் ஒருவரின் மரணத்தைப் பற்றிய உரையாடல்களில் "வழக்கமான" சிந்தனை முறையின் விகிதமே மேலோங்கியிருந்தது. ஆனால் இன்று அதன் சாத்தியங்கள் நவீனப்பட்டு விரிவடைந்திருக்கின்றன.

தனிப்பட்ட குணாதிசயங்களை குறிப்பிடுவோரின் கருத்துப்படி மரணித்தவர் குற்றமிழைத்தவராக புரிந்துகொள்ளப்படுகிறார். தடைகளை மீறி வாழ்வதற்கு முயற்சிக்காமல் கோழையாகவும், பொறுப்பற்றும் தன்னைத் தானே கொலை செய்துகொள்வது என்பது முட்டாள்தனமானது என்றும் அனைத்தையும் தாண்டி வாழ்பவரே முதிர்ச்சியானவர், கல்வி பயின்றவர் என்பதும் இவர்களுடைய சிந்தனை வடிவம்.

தற்கொலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும் முதலும் முடிவுமாக பாதிப்படைந்தவரே குற்றவாளி என்ற விதத்தில் யோசிக்கும் பொதுமனம் இவர்களுடையது.

இதற்கு எதிர்ப்புறமுள்ள மாற்று சிந்தனைக்காரர்கள் தற்கொலைக்கான காரணம் சமூக அரசியல் தொடர்பாக இல்லாத பட்சத்திலும் வேறு எந்த தனிமனித காரணங்களிலும்கூட "வழக்கமான" கருத்தியலாளர்களின் சிந்தனைப் போக்கை ஏற்றுக்கொள்வதில்லை. 

அதாவது, ஒரு ஆண் அல்லது பெண் காதல் தோல்வி/கடன் தொல்லை/மானபங்கம்/இழிவுபடுத்துதல் போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டாலும், தற்கொலை செய்துகொண்டவரையே குற்றவாளியாகப் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக துயரத்திலும் அதற்கான ஆறுதலிலும் பங்குகொள்கின்றது.

தற்கொலை சம்பவம் ஒரு சமூக அரசியல் பின்னணியில் நிகழும் பட்சத்தில் "வழக்கமான" சிந்தனைப்படி தற்கொலையாளனே குற்றவாளி என்பதை தீவிரமாக எதிர்ப்பதோடு தற்கொலைக்கான உண்மையான காரணங்களாக விளங்கும் அரசு இயந்திரம் அதனோடு சேர்ந்தியங்கும் முதலாளியம், சாதியம், நிலப்பிரபுத்துவம், உலகமயமாக்கம் போன்ற கருத்தியல்களை மிகவும் பலமாக எதிர்க்கின்றது.

சமூக-அரசியல் பின்னணியில் நிகழும் தற்கொலைச் சம்பவங்கள் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்ட கொலை என்பதே மாற்று சிந்தனையாளர்களின் ஆழமான நம்பிக்கை. மிகவும் சரியான நம்பிக்கையும் கூட. 

அனிதாவின்  இறப்பிற்கு முன்பிருந்து தற்கொலை வரை தற்கொலையின் இயக்கத்தை கீழுள்ளவாறு சொல்லிப்பார்க்கலாம்.

அனிதா --> உயிர்நிலை இயக்கம் 

மருத்துவர் --> பண்பாட்டு மேலாண்மை நிலை 

நீட் --> முதலாளிய அலகு

தற்கொலை --> உச்சபட்ச எதிர்ப்பு

உச்சபட்ச எதிர்ப்பின் முடுக்கம் --> அதிகார மையம்

இந்த தொடரியலில் அனிதாவின் ஒரே கனவாக இருந்த மருத்துவர் பட்டம் அதிகார மையத்தால் மறுக்கப்படுகிறது. மருத்துவர் என்ற பட்டத்தை அனிதாவின் கண்ணோட்டத்திலிருந்து வெறும் பொருளாதார மூலமாக (Economical source)  மட்டுமே பார்க்க முடிவதில்லை. தன்னைச் சூழ்ந்திருக்கும் தன்னோடு சேர்ந்த சனங்களின் பண்பாட்டு உயர்வாகவே இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

முதலாளிய அலகுகளின் உலகளாவிய பண்பு உயிர்நிலை இயக்கங்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் அபகரிப்பதுமேயாகும். இதை செயல்படுத்த மத்திய/மாநில அரசுகளின் தொடர்பு தேவைப்படுகிறது. 

காடு, மலை, ஏரி, கடல், நதி, நிலம், மனிதன் போன்ற உயிர்நிலை இயக்கங்கள் எப்பொழுதும் முதலாளியத்தின் கட்டுக்கோப்பிற்குள் இருக்க வேண்டும் என்பதே அனைத்து அரசுகளின் ஒரே கடமை.

ஆகவே, முதலாளியத்திற்கு எதிராக போராடிய உயிர்நிலையை ஒடுக்கும்பொழுது முதலாளியத்திற்கு வெற்றி கிடைக்கின்றது. 

இங்கு நீட் என்ற அலகு தன்னை எதிர்க்கவரும் உயிரியக்கத்தைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். இதனை இயக்கும் மத்திய அரசு முதலாளிய வன்முறையாக அனிதாவை படுகொலை செய்து தனது தடையின் முதல் சிறுகல்லை தூக்கி எறிகின்றது. அனிதாவின் பக்கத்திலிருந்து வெளிப்படும் உச்சபட்ச எதிர்ப்பாக உயிரியக்கத்தின் தொடர்நிலை முடிவுறுகின்றது. இதற்கான தூண்டுதல் அதிகார மையத்திலிருந்து அனிதாவிற்கு கடத்தப்படுகின்றது.

மேலும் தொடர்ந்த ஆய்வியல் தரவுகளிலிருந்து கண்டுகொள்ளப்படவேண்டிய துல்லியமான காரணங்களை,  பொதுமனம் எளிதாக தற்கொலை செய்துகொண்டவரின் மீதே அனைத்து பழிகளையும் சுமத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் இரண்டு.

சமூக காரணங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களை குறைகூறுபவர்களின் சிந்தனை வடிவத்தில் சாதியம்/முதலாளியம்/அதிகார பண்பு போன்றவையும் ஒன்றிணைந்திருப்பதினால்தான் பொதுமனத்தின் கருத்தினை எதிர்க்க நேரிடுகின்றது என்ற மாற்று மனத்தின் கருத்தியலை அறியாமல் இருப்பது முதல் சிக்கல்.

அதாவது அனிதாவின் தற்கொலையில் முதலாளியமும், அரசதிகாரமும், சாதியமும் நீட் என்ற வடிவில் தொடர்பில் இருந்து வந்திருப்பதால் அவருடைய மரணத்தில் அவரையே குற்றம் சாற்றுபவரும் அரசின், சாதியத்தின், முதலாளித்துவத்தின், நிலப்பிரபுத்துவத்தின் ஆதரவாளர்களாக மாறிவிடுகிறார்கள் என்ற உண்மையை உணராது போவது.

இரண்டாவதாக, அவர்களுடைய அறியாமையை அப்பாவித்தனம் என்று ஏற்றுக்கொண்டு விலக முடியாமல் போகும்  மாற்று மனத்தின் தவிப்பு. 

வழக்கமான மன அமைப்பு காலவெளியில் கலை இயக்கங்கள் சமூகங்களோடு தொடர்புகொள்ளும் விகிதாச்சாரம் உயரும்பொழுது தன்னை திருத்திக்கொள்ளும் என்பது என் நம்பிக்கை.

Sunday, June 4, 2017

வே.நி.சூர்யா, வெங்கட் (நிழல்), திரு (சீனுலதா) - கவிதைகள்

"சில சமயங்களில் புதியவர்கள் எழுதும் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்த கவிதைகளை விட சிறப்பாக அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்டவற்றை மாபெரும் கவிதை சந்தையிலிருந்து அடையாளம் காண்பதென்பது அரியதொரு செயல்"

1)  வே.நி.சூர்யா 

இருப்பிற்கும், இன்மைக்கும் இடைப்பட்ட வெளியை பரிசோதிக்கும் முயற்சிகளும், சமூகத்தின் ஒற்றைச் சாய்வு முறைமையின் மறுபக்கத்திற்கான சொற்களும் கவிதைகளாக மாறும் சமயம் நினைவிருத்த வேண்டிய பகுதிகளின் பயிற்சியே சூர்யாவின் கவிதைகள். 

மாறாமலிருக்கும் இவ்வுலக சௌந்தர்யரத்தின் மேலான சொத்தை அடியாக சில கவிதைகள் தேங்கி நிற்கின்றன என்பதே மேலும் சிறிது காலம் கழித்து எழுதப்பட வேண்டிய கவிதைகள் அவையென்பதை வாசகனுக்கு உணர்த்துவதோடு எந்த குறையையும் தன்னுள் கொள்ளவில்லை. 

சூர்யாவின் கவிதைகள் அவர் வரிகளுக்கு மாற்றாக காலங்களில் பேசப்படலாம். 

http://suryavn.blogspot.in/

வறுமை ஒழிக்க ஒரே வழி
------------------------------------------
நாமெல்லாம் இன்னொருவரின் கற்பனையாக இருக்கலாம்
அப்படி இருந்தோம் எனில்
அந்த இன்னொருவர் இன்னொருவரின் கற்பனையாய் இருக்கலாம்
இது தொடர்வரிசை.
முடிந்தால் ஒன்று செய்யவோம்
என்னை உங்கள் கற்பனையில் பயன்படுத்த பணம் என்று அந்த இன்னொருவரிடம் இருந்து வசூலிப்போம்
இப்படியாவது இந்த முதலாளித்துவ உலகில் பணக்காரன் ஆகிவிடுவோம். 

***

பிளந்தாயிற்று
----------------------

புலம்பிகொண்டே இருக்கும்
நாக்கை அறுத்தாயிற்று 
கிறுக்கிக்கொண்டே இருக்கும்
கையை அறுத்தாயிற்று
நடந்து கொண்டே இருக்கும்
காலை வெட்டியாயிற்று
மூச்சு விட்டு கொண்டே இருக்கும்
இதயத்தை பிளந்தாயிற்று.
அமைதியாகவே இருக்கும் மீதியை
என்ன செய்வதென்றே தெரியவில்லை

***

கடிகாரம் சொன்ன கதை 
--------------------------------------

புதியதாக கட்டிய வீடு
வீட்டின் சுவர் எல்லாம் கடந்த காலம்
வீட்டின் சன்னல் எல்லாம் எதிர்காலம்
வீட்டின் உள்ளே எல்லாம் நிகழ்காலம்
வெளியில் இருந்து பார்த்தால் வீடு
கண்ணுக்கு தெரியாது
அந்த இடத்தில் அடையாளத்திற்கு
வேப்பமரம் நட்டுவைத்து திரும்பி பார்த்தேன்
பயங்கரமான மரமாக வளர்ந்திருந்தது
யாரை பொறுத்த வரைக்கும் அங்கு வீடு இல்லை
ஆனால் என் கடிகாரத்திடம் கேட்டால் சொல்லும் டிக் டிக் என திகிலுட்டிக்கொண்டே அந்த வீடு கட்டப்பட்ட கதையை
தேர்ந்த கதைசொல்லி என் கடிகாரம்
ஆம்
உன் கடிகாரமும்
உன் கடிகாரத்தை கொடு
என்ன கதை என கேட்போம்
வா நண்பா

***

2) வெங்கட் (நிழல்)

முழுமையாக அழகியலின் பாற்பட்டு அதன்மேல் தீராத நம்பிக்கையுள்ள ஒருவரின் கவிதைகள் இவை. முதல் ஒலியில் கரையும் இசை, பார்த்த பொழுதில் நிகழும் இராசாயன இரகசியம், அதீதமில்லா கவர்ச்சி என்பதே வெங்கட் கவிதைகளின் அடிப்படை. அதில் கவிஞனின் ஆன்மா செயலுறும் பாங்கு இயற்கையோடு தோய்ந்த வரிகளை மீட்டெடுக்கின்றன.

தானாக சுலபமற்று நிகழும் அரிய தருணங்களின் காட்சிப் பிரதிகளாய் இருக்கின்றன இவரது கவிதைகள்.  அழகான இசை, ஓவியம், இயற்கையின் நிச்சயமில்லா காட்சிப்புலன்கள் என்பதோடு குழந்தைகளை ஒத்த வாழ்வோடு எழுதப்படும் கவிதைகளோடு இன்னமும் சில புதிய குரல்களை வரவழைப்பது ஒன்றே வெங்கட் அவருடைய கவிதைகளின் பூரணத்தை நிறைவுபடுத்தக்கூடிய வழியாக இருக்கும்.

குழந்தைகளோடு ஒருமித்து வாழும் படைப்பாளிக்கு, குழந்தைகளுக்கும் கவிதைகளுக்கும் இடைப்பட்ட வேற்றுமையை அளவிடுவது அத்தனை சுலபமல்ல. 

http://sollinnizhal.blogspot.in/

கார்கால நிறத்து ஆகாயத்திற்கருகில்
விருட்சமொன்று
ஒரு நுறு பட்சிகளை அணைத்தபடி
மிதக்கிறது.
நின்ற கணத்திலிருந்து அசைந்த கணம்
திசையெங்கும் சிதறுகிறது மரத்தின் நிழல்.
என் இருதயத்தின் தொலைதூரத்து
சொற்களெல்லாம்
கூடுகட்டத் திரும்புகிறது
படபடத்து இப்போது.

*** 
எந்த அறிகுறியுமற்று
ஏதோவொன்றாக விடிந்துவிடுகிறது 
சில பொழுது. 
இசையாக
காற்றில் மிதந்து செல்கிறது உடல் 
இலேசாகவும் கனமாகவும் இல்லாது. 
ஒரு சிக்னல் தேவைப்படுகிறது,
அந்த நிறுத்தத்தில் 
அருகிலொரு வாகனம் தேவைப்படுகிறது, 
அதில் ஒரு சின்னஞ்சிறு சிறுமியின்
ஏதாவது இரண்டு சொல் தேவைப்படுகிறது 
இந்த நாளை அநாதையாக்காமல்  
தொட்டுத்தூக்க.

***

மேசைமேல் நின்று
படபடக்கும் புத்தகத்தை
இந்தப்பக்கமிருந்தும் அந்தப்பக்கமிருந்துமாக
இருவர் வாசிக்கிறார்கள்.
ஒரே கணத்தில் ஒரே சொல்லை
இருவரும் சொல்லும் பொழுது
கவிதை மறைந்து
புத்தகம் தொலைந்து
கண்ணாடியாகிறார்கள்
இவனுக்கு அவனும்
அவனுக்கு இவனும்.

***

ஹிட்லர்
பழைய தூரிகைப் பெட்டிக்குள்
பிரியம் நிறைத்து ஒரு துப்பாக்கி வைத்திருந்தார்.
நாள் தவறாமல்
அந்தத் துப்பாக்கியை இதமாகத் துடைத்துவிடுவார்.
வைக்கும் நொடிக்குமுன்
யாரும் கண்டுவிடாதபடி கண்களை சுழற்றிவிட்டு
அன்பொழுக அழுத்தி முத்தமிடுவார்.
ஸ்பரிசம் கிட்டாத ஏக்கத்தில்
கண்ணாடி சன்னல் வழியே
எச்சில் ஒழுக்கிக்கொண்டிருக்கும் வளர்ப்பு நாய்கள்.
ஈரக்காற்றாலான தருணம் ஒன்று
எங்கிருந்தோ பீடிக்க
சிலநேரம் மிரண்டு
திசைகாணாது தூக்கி எறிவார்.
அவரது செல்லமான நாய்க்குட்டிகளோ
இளைப்பெடுக்க பற்றிவரும்
அவருக்கு நேராகத் துள்ளிக்கொண்டு.
தோட்டாக்கள் இழகும் காலமொன்றில்
தூரிகையால் அழுத்திக்குழைத்து
தன்உடலில் துப்பாக்கியை வரைந்துவிட்டு
உறங்கப்போனார்.

***


3) திரு (சீனுலதா)


திரு சுவாரசியமான கவிஞர். புதுமை, மாற்று சொல்லாடல், ஒரே நிறத்தை வேறொரு வடிவில் கவிதையாக்கல் போன்ற முயற்சிகளை முதிர்ச்சியோடு வெளிப்படுத்துபவர். 

சமூக அவலங்களையும், வன்மமிக்க அரசியல் நெறிகளின் தூய தர்மங்களையும் பகடி செய்யும் கவிதைகள் மறுபக்கம் ஆண்Xபெண் உறவு மையத்தின் இணைக்க முடியாத சரடுகளை தீராத அன்பின் எளிய வழிகளில் முன்னிறுத்தும் கவிதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

தத்ரூபற்ற தன்மைகளால் நிறையும் முக்கியமான கவிதைகள் செம்மையைக் கோரும் தருணங்களை வாசகன் கடப்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிடுவது முதிர்ச்சியின் பலமின்மையில் விழும் ஓட்டை சரிபாதி கவிதைகளே சமன் செய்கின்றன.

யோசித்து, பொறுமையாக செயல்படும் திருவின் கவிதைகள் தொகுப்பாக வெளிவரும் காலத்தில் அவை தனித்து நிற்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.


என்ன வண்ணமோ மனசுல....
------------------------------------------------------


இப்பெருநகரத்தின் நெரிசலான நடைபாதையில்
அமர்ந்தபடி குரலெடுத்தால்
ஒரே பாடல், குமிழ்களாய் மோதி
வர்ணங்களாய் உடைந்தொழுகுகிறது
வானத்துக் கருமை
கால்களிலிருந்து சொட்டியபோது
நட்சத்திரங்களை போல் மின்னி மறைவுற்றார்கள்
மாம்பூ வர்ணத்தின் இளகிய தசை
புளித்த இனிப்பை கண்களுக்கு வழங்கிச்சென்றது
களிநடை பயின்ற கத்திரிப்பூ வர்ணத்திற்க்கும்
கணுக்காலில் சிவந்தொழுகும் செம்பருத்திப்பூ தருணத்திற்க்கும்
கொலுசு செய்து தோற்றுப்போவதில்
என் பாடல்கள் முனைப்புகாட்டுகின்றன
பாதசாரிப் பெண்டீர்களின்
வனப்பான கால்களும் வண்ணவண்ணக் கால்சாராய்களும்
கண்களைப் பறிக்கும் பொழுதுகளில் – என்னையறியாமல்
ஒரு அபஸ்வரத்தை மீட்டித்தொலைக்கின்றேன்
இந்நகரத்தின் எல்லா நடைபாதையிலும் அமர்ந்தாயிற்று
நெஞ்சிலெழும் அப்பாடலைச் சொல்லி எந்த குற்றமுமில்லை
அது என் குருட்டு மனைவிக்கு பிடித்தமான பாடல்
எனக்கும் அவளுக்குமான அந்தரங்க பொழுதுகள்
வர்ணங்களின் விநாடிமுள்ளில் துடித்துக்கொண்டிருப்பதாக
நம்பிக்கை கொண்ட ஒரு நாளில்
பழுப்புநிற பஞ்சுப்பொதி காலொன்று
பேரிரைச்சலின் கூட்டிசைப்பாக
அபஸ்வரத்தை மீட்டித்தொலைத்தது
அதிர்நடையிட்ட செம்பழுப்புத் தொடைச்சதைகள்
பிரியாணிப் பொட்டலமாய் உதிர்ந்து விழுந்தபோது
வறண்ட தொண்டையும் இருண்ட கண்களுமாய்
நான் ஒரு லெக்பீஸை கடித்து முடித்திருந்தேன்
துடித்தடங்கிய பழுப்பு வர்ணம்
மனைவியின் பொட்டைக் கண்களை நினைவூட்டியபோது
ஒவ்வாமையின் காரம் கண்ணீராக வழிந்தூறியது
கறிச்சதைகள் நீக்கம் பெற்ற லெக்பீஸ்துண்டு
என் போலியோ கால்களை அப்பட்டமாக நினைவூட்டியபோது
கசிந்துகொண்டிருந்த இசையின் நாண்புடை படீரென அறுப்பட்டது

***

உனக்கும் எனக்குமான வெற்றிடத்தில்
ஒரு உறவை கட்டியெழுப்பியாக வேண்டும்
வெற்றிடத்தை வெளிப்பூச்சுக்கொண்டு மறைக்கும் கலையை
உன் பாணியில் நீயும் என் பாணியில் நானும்
மற்றெல்லோரைப் போலவும் கற்றுத் தேர்ந்திருந்தோம்
காற்று புகாத வெற்றிடத்தில் நீரையும் நெருப்பையும்
நாம் சமைத்தாக வேண்டும்
சீரில்லாத அலைவரிசையில் இருவரின் கைகளும் துழாவி ஒய்ந்தன
இன்னதென்றில்லாத ஒழுங்கில் உறவு எழும்பினாலும்
வடிவங்கள் குலைவது வெற்றிடத்தின் இயல்பு
குணவதியே
என்னிடம் ஆணி இருக்கும்
உன்னிடம் அன்பு இருக்கும் தானே
குலைந்த சட்டகத்தில் இடம் பார்த்து ஆணியை வைக்கிறேன்
அன்பு கொண்டு ஓங்கி அறை
ஆணிக்கூர்மையின் மினுப்பு ஆழமாய் இறங்கட்டும்.

***

உன் கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
நம்மை சுற்றிலும் இருள் படர்ந்தாகிவிட்டது
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை
நாம் எடுத்துவைக்கும் அடுத்த அடி இழுத்துக் கொள்ளும் அதல பாதாளமோ
புதைச்சுழியின் பெருமணலோ
யாரறிவார்
உன் கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
இவ்வுலகில் யாருக்கும் யாரும் துணையில்லாத போதும்
பாசாங்கு செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் -உன்
கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்
நடுங்கும் என் விரலுக்கு
மெலிதான முத்தம் போதுமானதாக இல்லை – ஆயுள் ரேகையென
மூச்சுக் காற்றை கைகளுக்கு நடுவில் பதித்துவை – உன்
கரங்களை இறுக பற்றிக்கொள்கிறேன்

***

முசலுக்குட்டி நஸ்ரியா மூஞ்சூறு அஞ்சலி

---------------------------------------------------------------------

என் அறைகளில் வலுக்கட்டயாமாக புகுந்துகொண்ட
மூஞ்சூறுவை வெளியேற்ற முடியாமல்
தோற்றப்போது அது பழிப்புகாட்டிச் சென்றது
இடுக்குகளிலிருந்து சின்னஞ்சிறிய தலையை
எட்டிக்காட்டி தன்கூம்பு வாயை குவிக்கும்போது
அறையை முழுவதுமாக வியாபிக்கிறது
நாவை ஒழுங்குசெய்து இடதுகண்ணை சிமிட்டும்
இமை உரசலில் தீ அறையில் பரவி தகிக்கிறது
பசித்திருக்கும் தனிமையை அது சாப்பிட்டபோது
அறையை பகிர்ந்துகொள்ள முசலுக்குட்டி ஒன்று
வம்படியாய் வந்துவிட்டது
பசிதாங்காத நானும் முசலுக்குட்டியும்
சுடச்சுடப் பாலை காய்ச்சிப் பருகினோம்
முசலுக்குட்டி பாலின் வெப்பம்தாளாமல் சாம்பல் ஆனது
சாம்பலிலிருந்து வெளியேறிய மூஞ்சூறுவின் வெப்பமூச்சு
பாலை மீண்டும் சூடாக்கிப் முசலுக்குட்டியை வெளியேதள்ளியது
மாறிமாறிப் பசியாறிய இச்சங்கிலித்தொடர் மயக்கத்தில்
சாம்பல்வடிவ மூஞ்சுறுவை
முசலுக்குட்டி என அழைத்துவிட்டேன்
தன் உடலை மாற்றியதற்காக முசலுக்குட்டி
அறையில் இருந்து கோவித்துக்கொண்டு வெளியேறியது.
பின் ஒருநாள் மூஞ்சூறுவும் அறைபிடிக்காமல்
வெறுத்துப்போய் தானாக வெளியேறிவிட்டது
தகிக்கும் சாம்பலும் அதில் காய்ந்துகொண்டிருக்கும் பாலும்
குறும்பு கொப்பளிக்கும் கண்களும் மட்டும்
அறையில் மிச்சம் இருக்கிறது.
அத்தை பொண்ணு ஆண்ட்ரியா…
தொண்டையில் கூழாங்கற்களை அதக்கியிருக்கும்
என் அத்தை பெண்ணின் குரல்
அடைத்துக் கொண்டு வரும்
செப்புக்குழல் மின்சாரமென பாயும்
ஆகப்பெரிய கலகக்குரலில் அவள்
மாமாக்களின் டவுசரை
அவிழ்த்து சீட்டியடிப்பாள்
டவுசரை பிடித்தபடி
அலறிக்கொண்டு ஓடும் மாமாக்களை
சில சமயம் மஞ்சுவிரட்வது போல்
ஆராவரத்துடனும்
சில சமயம் மஞ்சத்தண்ணீர் ஊற்றுவதுபோல்
ஆசையுடனும்
அவள் குரல் விரட்டித் துரத்தும்
மத்யம சஞ்சாரத்தில்
‘மா’ ‘மா’ என விதவிதமாக
ஆலாபித்து அழைக்கும் அத்தைமகள்
ஓரிடத்தில் பெருங்குரலெடுத்து
மாம்ம்மா என அழுத்தம் கொடுத்து
விரட்டி விளையாடுவாள்
கெளுத்தி முள்ளின் அழுத்தமென
கண்களில் நீர் விட்டு
உச்சம் தொடும் அவ்விடம்
வெறும் குரல் மட்டுமல்ல
என் சக மாமா பயல்களே…
ஐட்டம் சாங் எனும் பிரேதப் பாடல்:
கால்களின் குதியாட்டத்தில்
பிரேதங்களை தனித்தனியாக
பிரித்து கண்களுக்கு
பரிசோதிக்கத் தரும் அவள்
இன்று தன்இடையை
உடலோடு சேர்த்து அந்தரத்தில்
கால் உயர்த்தி ஆடுகிறாள்
இரத்தம் சொட்டும் உதட்டுச்சாயத்தில்
மையிட்டொழுகிய கண்களை வெளியிட்டு
தன் அகாலத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறாள்
காதலியொருவள்:
எனதன்பு காதலியொருவள்
குருவி போன்ற அடக்கமான நீள்வட்ட முகத்தில்
ரேவதியின் சாயலில் சிரிப்பாள்
எனதன்பு காதலியொருவள்
கண்ணாடியணிவித்த மாதவியின் சாயலில்
நெடுநெடுவென தோகை விரிப்பால்
எனதன்பு காதலியொருவள்
வெள்ளை நிறச் சரிகாவென
வட்டமுகச் சாயலில் மூக்கை சிணுக்குவாள்
எனதன்பு காதலியொருவள்
மெலிதாகத் துருத்தும்
அஞ்சலித் தொப்பையில்
சாயலைக் கூட்டுவாள்

எவ்விதச்சாயலும் கலக்காத
தனித்துவ நடிகனாக
அவர்களின் முன்னே
நடிக்க முயன்றுகொண்டிருக்கும் என்னிடம்
பேரன்பும் பெருமழகும் கொண்ட
அனைத்துக் காதலிகளும் ஒற்றைச்சாயலில்
ஒருங்கே இணைகிறார்கள்
உலக நடிகர்களின் வழக்கம் மாறாது
வசனம் மறந்து
கனாக் காலங்களில்
உறைந்து கொண்டிருக்கிறேன்.

எளிதன்றோ…
அஃதெனினும் இனிதன்றோ!
நடிகனாக இருப்பதைவிட
எப்போதும் தள்ளி நிற்கும்
ரசிகனாகவே இருப்பது.

சன்னி லியோனும் சமையல் சாமானும்…
--------------------------------------------------------------------

வறண்டு கிடக்கும் இப்பாலை பிரதேசத்தில்
சன்னி லியோன் சமைந்துகொண்டிருக்கிறாள்
சமைத்துக்கொள்ளும் முன்னமே தன்னை
பரிமாறிக்கொள்ளும் கலையரசி அவள்
நதியில் செல்லும் அன்னப்பட்சி போல்
கால்களை பின்னிப் பின்னி இப்பாலை நிலத்தில்
நீந்தியபடி சமைந்துகொண்டிருக்கிறாள்
சொருகும் அவள் கண்களிலிருந்து விரியும் உடல்
ஆலிவ் இலையை தூவும் பறவையின்
சிறகென அசைகிறது
தூவப்பெற்ற ஆலிவ் இலைகள்
பொய்க்கோப முனிவர்களின் சடாமுடியில்
எச்சமென வீழ்கிறது.
கொதிக்கும் அவள் பாலை உடம்பின்
தளும்பும் மணற்மேட்டின்
அந்தகார நிழலில் இளைப்பாறுகிறேன்
உருகிக் கசியும் அவளின் சமையல் மணத்தில்
புதைமணலையும் சுழிக்காற்றையும்
அவசர அவசரமாகக் கடந்து
சமைந்துகொண்டிருக்கும் அப்பரதேவதையின்
குடவரை கோயில் வாயிலில்
ஆதியந்தம் தொலைத்த அந்தர்யாமியாய்
பசிமறந்து தியானித்துக்கிடக்கிறேன்

***

 

 


Friday, February 24, 2017

இறந்தவர்களை அலங்கரிப்பவன் - மனித அன்பின் முற்றுப்பெறா வெளி


ஆகச் சுருக்கமாக குழந்தைகளாலும், இயற்கையாலும் ஆன கவிதைகள். வெள்ளந்தியும் மென்மையுமாய் சமூக சிதைவு/அசிதைவுகளின் பிரக்ஞையற்று நகரும் குழந்தைப் பருவத்தின் மேல் ஏவப்பட்ட இரக்கமற்ற துரோகத்தை இக்கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன. 

........
பதிலீடு செய்வதைக் குறித்து 
நாம் 
இன்னம்கூட அதிகமாக 
பேசித் தொலைக்கலாம் 

என்ற சிறிய கோபத்தின் மூலம் இக்கவிதை மொத்த தொகுப்பையும் விவரித்துவிட எத்தனிக்கிறது. கவிதை எத்தனிக்கையில் தன் கால்களுக்கடியில் தெளித்து வீசப்பட்ட எண்ணைப் படலத்தின் மீது கால் பதிய முடியாமல் தவிக்கிறது. அது ஆட்டிசம் பாதித்த சிறுமியின் மேலுள்ள கருணை, அவள் நித்ய சிறுமியாய் நிலைக்க நிகழ்த்தும் "வேறு வழியற்ற" பிரார்த்தனையின் வடிவம். பிரார்த்தனையின் ஆதி சொற்கள் சிறுமியை மீட்டுவிட வேண்டி அல்ல; அதற்கப்பாற்பட்ட ஓர் வேண்டுகோள் மட்டுமே. அவ்வேண்டுகோளே சிறந்த விடுதலையாகவும்..

கவிதை செயலாற்றும் குழந்தைகளின் உலகமும் நிலையாமையை இருப்பாக பெற்றுள்ள இயற்கையும் தொகுப்பின் மூலப்பேசுபொருள்கள்.

இயற்கையின் மீதுள்ள பிரியத்தை கவிஞன் எப்போதும் கவிதை உருவாக்கும் ஓர் மனப்பிரதிமையிலிருந்தே கண்டுகொள்கிறான். ஓவியங்களும், புனைவுகளும் இன்னபிற கலைகளும் ஆக்கித்தரும் அனுபவத்தைவிட அதன் சப்தத்தை கேட்டுணர கவிதையே சௌகரியமானது என்பதாலோ  என்னவோ அவன் சூழலின் மேல் விடுக்கும் குரூரத்தை அறியாத ஓர் வழிப்போக்கனைக் கொண்டு அறிமுகம் செய்கிறான். அதற்காகவே புனைவின் நீண்ட வரலாற்றிலிருந்து ஒரு கொத்து இசங்களை உருவாமல் எளிய கதையாடலில் அதை உரைக்கிறான். 

சிறார்களே யதார்த்த மொழியின் வடிவங்கள். அப்பேற்பட்ட ஒன்றுமறியாத அம்மொழியின் மீதான நோய்க்கூறுகள்,  பிறழ்வுகள் போன்ற இயற்கைச் சிதைவுகளை இயற்கை X சிறார் உலகம் என்ற இருமையின் எதிர்வுகளாக்கி இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. அவ்வகையில் கவிஞனுக்கே அறியாமல்  நிகழும் எதிர்வுகளின் தாக்கம் சூழலியலின் மேலுள்ள ஆக்கிரமிப்பு (உணவுச்சங்கிலி, புற(ம்) 400, ஒலி மீட்புப் பறவை, பார்வையாளன்,..) என்ற அருவ அறிவியல் தொகுப்பின் ஊடாக இயங்குவதாக நினைக்கிறேன்.

யதார்த்தத்தில் அர்த்தமற்ற ஒன்றை கவிதை ஒரு ஊமைச் செயலைப் போல அல்லது வெறும் பாவனை செய்தலாக பிரதியில் அமைத்து வைக்கிறது. குழந்தைகளின் இழப்பு வெறும் இழப்பல்ல; பேரழிவு என்பதும் பேரிழப்பு என்பதும் பிரதியின் செயல் வலியுறுத்தும் கருத்தின் பின்னணி. இந்த இழை பிரதியில் முரணியக்கத்தோடு நேரடியான, எதிர் கருத்துள்ள இரு மையங்களுடன் ஊடாடும்.

குழந்தை உலகின் நோய்மையும், இயற்கையின் சரிவும் நேரடியான சமூகவியல் படிமங்களேயானாலும், பிரதியின் செயல் என்ற இழை குற்றவுணர்வுகளற்ற இயற்கையின் மீதான தாக்குதலை வெளிப்படுத்துவதின் வாயிலாக அதற்கு நிகரான சிறார் உலகின் குறைபாடுகளை சமன் செய்வதாக உள்ளது. ஈடு செய்தல் அல்லது இணை செய்தல் என்பதன் மூலமாக கவிதை தன்னிறைவையும், திருப்தியையும் அடைவதாக எடுத்துக்கொள்ளலாம். 

அதாவது நிகழ்காலத்தில் மனிதனின் பறத்தல்வாழ்வியலோடு ஒத்திசைந்த பார்வை ஒருபுறமிருந்து எதிர்வின் நேர்கோட்டுத்தன்மையை பிரதிபலித்தால் மறுபக்கமிருந்து கடவுளின் வெற்றிடம், பிரார்த்தனையின் தோல்வி, இயற்கையின் மரணம் போன்ற பண்புநிலைகளோடு உயிர்பெற்ற அறிவியக்கம் குழந்தைகளின் பக்கமாய் நின்றுகொண்டு அவர்களை அரவணைத்து உலகத்தைக் கசக்கி எறியும் சிந்தனை நீரோட்டத்தைத் தாங்கியுள்ள பிரதியாகவும் வாசிக்கப்படும் வாய்ப்பு தற்செயலாகவே இத்தொகுப்பில் உருவாகியுள்ளது. ஒரு தராசைப்போல வடிவமைக்கப்பட்ட ஸ்தூலப் பிரதியிலிருந்து உருவாக்கப்படும் சூக்குமப் பிரதி.

இந்த ஒரே ஒரு தன்மையே இறந்தவர்களை அலங்கரிப்பவன் தொகுப்பின் கவிதைகளின் இரட்டைக் குழந்தைகளை வாசகனிடம் அறிமுகம் செய்து கையளிக்கின்றது. சிறார்களின் மேல் ஏவப்படும் வன்முறை, இயற்கையின் மேல் நிகழும் வன்முறை என்பவை முதலில் வெளிவந்த நேரடியான "அர்த்தவசதியுள்ள" ஸ்தூலக்குழந்தையாகவும் இரண்டும் சமதளத்தில் நிற்கும் சமயம் ஏதுமற்று தன் பருவத்தைக் கடந்திட நம்பியிருக்கும் பிஞ்சுக்கூட்டத்தை நோக்கி இயற்கையும் அதன் சகல காரணிகளும் பிரயோகிக்கும் வன்முறையின் மீதான பழிதீர்த்தல் மற்றுமொரு "அர்த்தசாத்தியமுள்ள" சூக்குமக்குழந்தையாகவும் உருப்பெறச் செய்துள்ள சூக்குமத்தின் பிரதியே இறந்தவர்களை அலங்கரிப்பவன் என்ற வார்த்தைகளின் அர்த்ததளமும் மனித அன்பின் முற்றுப்பெறா வெளியும்.  

Friday, February 10, 2017

இரண்டு பெண்கள்
இரண்டு மொழிகளில் பேசியபடி
நூறு நூறு
ரூபாய்களைக் கொடுக்கிறார்கள்
(அவர்களின் நிழல் அசைவுகள்
முத்தமிட்டுப் புணர்வது போல
தரையில் நெளிவதை அவன் கவனித்தான்)

நேரெதிரே
முதியவரின்
கிழட்டு கைத்தடி
மெல்ல அசைந்து மீன் வண்டியை
விட்டு நகர்கிறது

வெறுமையான மதியத்தின்
தெருவில்
நூறு ரூபாய் தாள்களோடு நிற்கும்
மீன் வியாபாரி
விருப்பமற்று வளர்த்த தாடிக்குள்
சில்லரையைத் தேடுகிறான்

சடலங்களைப் போல
வாய் பிளந்து கிடக்கும் மீன்களின்
மீதிருந்த
ஈக்களை விரட்டுகிறான்

சுவாசமற்ற
அதன்
வெறித்த கண்களில்
மழை மேகங்கள்
எவ்வொரு சலனமுமின்றி
படர்ந்து செல்கின்றன

#########################

என் மகளைப் 
புணர்வதற்கு ஒப்பானது
உன்னிடம்
என்
காதலைச் சொல்வது
என்பது

சொற்களின் குவியல்களில் 
ஒரு சொல்
ஒலிக்கும்
முன்
ரத்தம் சீற 
என் நாவறுத்து வீசுவேன்
எப்பொழுதும் போல
விடியவில்லை நேற்றைய
காலை
காகங்கள் கும்பலாக
கரைந்து
சூழ
வெட்டு ஓடுகளினின்று
ஊசிகளாய் இறங்கிய
மங்கலான வெளிச்சம்
துடைப்பமிடா அலைந்தோடும்
புள்ளித் துகள்களுள்
படரத் துடித்தன
அழைப்பு மணியின்
பித்தானுக்கு சுவர்க்கோழி
பதில் சொன்னது
இராசி பலன் சொல்லிகள்
தேவையற்றுப் போனார்கள்
நீண்டு வந்த இரயில்
வண்டியின் குரல் அடங்கிப்போயிருக்க
காலையில் அபூர்வமாய்
வரவுற்ற
பிச்சைக்காரன் மட்டும்
நிரந்தரமாக வீட்டுக்குள் தங்கிவிட்டான்
சிறுவர்கள்  கூட்டமாக முற்றத்திலிட்ட கோலத்தின் மேல்
பீய்ச்சி அடித்த
பெருநீரின் நாற்றம்
அகாலத்தின் கனவொன்றில்
வந்து போனது
என் நம்பிக்கை சரிதான் அங்கு
அவள் கோலமிழந்த காட்சியில்
ஒரு நடிகையைப் போலவே
இல்லை வழக்கம் போல்
இவன் விரல்கள் சூப்பிக்கொண்டு
தவழ்ந்துகொண்டிருந்தான்
புனித சிலுவை அணிந்து
கண்ணாடிப் பெட்டிக்குள் வாழும்
என் கண்களில் இலை முனை வழி சொட்டும் நீரென விழ ஆரம்பித்த
நேரத்தில்
பிச்சைக்காரன் கையளித்து
என்னை
அழைத்துச் செல்கிறான்
மீள இயலா கனவொன்றிற்கு