Pages

Monday, September 11, 2017

தமிழ் தேசியம் நிகழ்ந்த பின்னரும் சாதியமைப்பு இருக்கவே செய்யும். தற்போதைய சூழல் அப்பேற்பட்டது. மறுபக்கம், சாதியை ஒழித்தல் என்ற செயல்பாட்டு முறை நீண்ட காலநிலையைக் கொண்டது. நாளையோ இன்னொரு மூன்று மாதங்கள் கழித்தோ சாதி அழிந்துவிடாது. உலகம் பெருவெடிப்பிலிருந்து சிதறி உயிரியல் தன்மையுள்ள ஒரு புதிய கோளாக மாறியதைப் போல மிக நீண்ட தொடரியக்கத்தை தன்னிடையே கொண்டது. முழுமையாக முடிவுற ஓரிரு நூற்றாண்டுகளைக் கடக்க வேண்டியிருக்கும்.

காரணம், சாதியம் ஒற்றைப் படிநிலையான கருத்தியலல்ல. பல நுண் அலகுகளை தனக்குள்ளே சேர்த்துக் கொள்ளும் தன்மையுடையது என்பதால் மிகக் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. முதலாளியம், லிங்கமையவாதம், பேரினவாதம், நிலப்பிரபுத்துவம் போன்றவற்றை மேலும் வலுப்படுத்தக்கூடிய கருத்தியலாக சாதியம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கின்றது.

சாதியை ஒழிப்பதற்கான செயலூக்கம் வழிவகையாக/சுழலாக (மீள நிகழ்த்துதலின் வினை நகர்வு) சமூக உரையாடலின் பதிவுகளில் நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அந்த நினைவுபடுத்துதலினூடே சாதி ஒழிப்பிற்கும், சாதிய உணர்வின் அழுத்தம் ஒன்றுமில்லாமல்போகவும் செய்யக்கூடிய சாத்தியங்கள் பிறக்கக்கூடும். சாதியதன்மையிலிருக்கக்கூடிய உளவியலில் சமூக உரையாடல்களில் நிகழும் ஒலிக்குறிகள் அதாவது சிந்தனைகளாக பண்பு மாற்றமடையக்கூடிய கருத்தியல்கள் (சாதியம் குறித்த உரையாடல்கள் / கருத்துப்பகிர்வுகள்) பதிவுறும்பொழுது முழுக்க முழுக்க அது சாதி ஒழிப்பைப் பற்றியவாறு நிகழுமாறு பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

ஏனெனில், ஒலிக்குறிகளே நிகழ்நிலை சப்தங்களாக உருவாகி உரையாடல்களில் பதிவடையும். உரையாடல்கள் சம்பவங்களாக உருப்பெற வைக்கக்கூடிய கருத்தியல்களின் விதைப்பகுதி. இவ்விதைப்பகுதியில் நிகழும் நுண்மையான மாற்றமே படிநிலைகளாக இயங்கிவரும் அனைத்து சமூகங்களின் சிந்தனையாக்கத்தில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும். 

அயோத்திதாசர், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களாலும், சோ.தருமன், பூமணி போன்ற புனைவெழுத்தாளர்களாலும், டி.தருமராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் வரையிலான கட்டுரை எழுத்தாளர்களாலும் இத்தகைய ஒலிக்குறிகளே மேலும் மேலும் சமூக உரையாடல்களில் வெவ்வேறு காலகட்டங்களில் சேர்க்கப்படுகின்றது.  இதன் நீட்சியே ரஞ்சித்தும். 

மேலோட்டமாக இதை தலித் அரசியல் என்ற சொல்லாடலால் அழைக்கப்பட்டு வந்தாலும் கருத்தியல்களால் பிளவுறக்கூடிய மக்களின் நடுவில் சிந்தனை மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியங்களை இத்தகைய ஒலிக்குறிகள் ஏற்படுத்துகின்றன.

இதனூடாக தமிழ் தேசியத்தைப் புரிந்துகொள்ளுகையில் சாதியோடுகூடிய தேசியத்தையே அது முன்வைக்கிறதென்ற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறக்கும் ஒவ்வொருவரின் பேராசையாக மாற்றப்பட்டுவிட்ட சாதி இந்துக்களிடமிருந்து வெளிப்படக்கூடிய தலித் அரசியல் ஒரு வகையில் நிகழாதபட்சத்தாலும் ஒவ்வொருமுறையும் அக்குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே பேசவேண்டிய கட்டாயத்தினாலும் தலித் அடையாளத்திலிருந்து விடுபடாமல் சமூகப்பிரச்சினைகளில் அதில் ஒன்றான சாதியத்தைப் பற்றியும் நினைவூட்டவேண்டியதாகிவிடுகிறது. 

இதன் பின்னணியில் சாதி ஒழிப்பு குறித்த தொடர்ந்த உளவியலியக்கமான மீள நிகழ்த்துதலின் வினை நகர்வு மட்டுமே செயல்படுகின்றது என்பது நுண்மையாக மறைந்துள்ள காரணம். இங்கு மீண்டும் பலமுறை வலியுறுத்தப்படும்போது அதற்கான குரல் ஓங்காதபட்சத்தில் எதிர்நிலை கருத்தியலால் சாதியம் எப்பொழுதும்போல தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும்.

ஆதலால், சாதியற்ற தமிழ் தேசியம் கடினமானது. அதிகபட்சம் கா.சிவத்தம்பி யாழ்ப்பாண சமூகத்தை ஆராய்ந்து அதன் சமூக அமைப்பிலுள்ளபடி கட்டுப்பாடுள்ள சாதிகள் (Bound Caste) , கட்டுப்பாடற்ற சாதிகள் (Unbound Caste) [யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் - பக்: 16] போன்ற ஒருவகை பிரிவு (Type)  வேண்டுமானாலும்  ஏற்படலாமே தவிர தமிழ் தேசியத்தால் சாதியத்தை ஒழிப்பதென்பது யதார்த்தமானதல்ல.

சாதி ஒழிப்பு சார்ந்த சிந்தனைப்போக்குகள் முதலில் சாதி இந்துக்களிடமிருந்தே உருவாக வேண்டும். அதுவே சாதி ஒழிப்பின் முதல் படியும், ஆக்கப்பூர்வமான நகர்வும். இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பட்ட சமூக அவநம்பிக்கைகளின் தொடர் உரையாடல்களில் சாதியத்தையும் இணைத்தே பேச வேண்டும். சமூகத்தில் இதன் பதிவுகள் கடத்தப்படும்பொழுதுதான் சாதியத்தை முழுமையாக தகர்த்தெறிய வாய்ப்பு ஏற்படும்.

அதற்கான நம்பிக்கை தற்போதுவரை  இல்லை என்பது பெரும்பாலானவர் அறிந்திராத ஒன்று.

No comments:

Post a Comment